உ.பி.யில் வேகமெடுக்கும் நகரமயமாக்கல் திட்டம்.. பல ஆயிரம் கோடி செலவில் பணிகள் மும்முரம்.. யோகி அதிரடி
அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மெட்ரோ ரயில்கள், மின்சார பேருந்துகள் போன்ற நவீன போக்குவரத்து வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாக வளர்ச்சித் திட்டப்பணிகள் வேகம் எடுத்து வரும் நிலையில், நகரமயமாக்கல் திட்டம் அங்கு முழுவீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றுவேன் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, உபியில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உள்கட்டமைப்புக்கும், கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்களில் உபி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

எனவேதான், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டிலும் மற்ற அனைத்து துறைகளை காட்டிலும் கல்விக்கும், வளர்ச்சி திட்டங்களுக்குமே அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் ஒருபகுதியாக, மெட்ரோ ரயில், புதிய சாலைகள், சாலை விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டும் ரூ. 55,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளே அதன் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி, அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மெட்ரோ ரயில்கள், மின்சார பேருந்துகள் போன்ற நவீன போக்குவரத்து வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, மாநிலத்தில் உள்ள முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையிலான சாலைகள், எக்ஸ்பிரஸ் வே சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், புதிய விமான நிலையங்கள் துறைமுகங்கள், ஏற்றுமதி - இறக்குமதி மையங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உள்கட்டமைப்புத் திட்டத்தின் ஒருபகுதியாக, தற்போது நகரமயமாக்கலுக்கான பணிகளில் உபி அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது. உபியல் உள்ள பல நகரங்களை மேம்படுத்துவதற்காகவும், சில ஊரக பகுதிகளை நகரமயமாக்குவதற்காகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வரைவு அறிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை பரிசீலித்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இந்தியாவே கடந்த 6 ஆண்டுகளாக நகரமயமாக்கலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அந்த வகையில், நகரமயமாக்கலை நோக்கி நாமும் செல்ல வேண்டியது அவசியம். உத்தரபிரதேசத்தில் புதிதாக உருவாகும் நகரங்களில் அனைத்து நவீன வசதிகளும் இருக்க வேண்டும். பூங்காக்கள், போக்குவரத்து வசதிகள், போதிய எண்ணிக்கையிலான காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என அனைத்து வசதிகளும் இருக்கும்படி நகரங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும். இதற்காக ரூ.2000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications