ட்விஸ்ட் வைக்கும் அகிலேஷ்.. யோகி பாணியில் திடீரென தேர்தலில் நிற்க முடிவு.. என்ன நடக்கிறது உ.பியில்?
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அடுத்த திருப்பமாக சமாஜ் வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க அங்கு அரசியல் களமும் மாறிக்கொண்டே வருகிறது. வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது.
முதலில் இந்த சட்டசபை தேர்தலில் யோகி ஆதித்யநாத், மாயாவதி, அகிலேஷ் யாதவ் போட்டியிட மாட்டார்கள் என்று கூறப்பட்டது. இவர்கள் நேரடியாக மேலவை வழியாக எம்எல்ஏ ஆவார்கள் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதன்பின் யோகி ஆதித்யநாத் முதல்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

சட்டசபை தேர்தல்
அதன்படி உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில்தான் ஆதித்யநாத் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசியில் அவர் கோரக்பூரில்தான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்ட ஆலோசனைகளுக்கு, விவாதங்களுக்கு பிறகு கட்சி ஒருமித்த குரலில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக அகிலேஷ் யாதவும் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

போட்டியிட்டது இல்லை
யோகி ஆதித்யநாத் போலவே அகிலேஷ் யாதவும் எம்பி தேர்தலில் மட்டுமே போட்டியிட்டு இருக்கிறார். சட்டசபை தேர்தலில் நேரடியாக வேட்பாளராக களமிறங்கியது கிடையாது. தற்போது அகிலேஷ் யாதவ் ஆஸம்கார்க் தொகுதியில் இருந்து லோக்சபா எம்பியாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆதித்யநாத் தேர்தலில் போட்டியிடுகிறார். இது மக்களுக்கு ஒரு விதமான வலிமையான மெசேஜை கொடுக்கும்.

தேர்தல் போட்டி
தேர்தலில் போட்டியிடுவது என்பது மக்களிடம் வரவேற்பை கொடுக்கும். இதனால் அகிலேஷ் யாதவும் தனக்கும் பயம் இல்லை என்று காட்டும் வகையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத் தேர்தலில் போட்டியிட விரும்புவது ஓசி பிரிவினர் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்ற வரவேற்பு யாதவ் பிரிவினர் மற்றும் பிற ஓபிசி பிரிவினர் இடையே தனக்கு கிடைக்கும் என்று அகிலேஷ் யாதவ் நம்புகிறார்.

கிழக்கு உத்தர பிரதேசம்
பெரும்பாலும் கிழக்கு உத்தர பிரதேசம் அல்லது மத்திய உத்தர பிரதேசம் தொகுதியில் இருந்து அகிலேஷ் யாதவ் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. அதிலும் பெரும்பாலும் லக்னோ தொகுதியில் இருந்து அகிலேஷ் யாதவ் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமயங்களில் இரண்டு தொகுதிகளில் இருந்து அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

அபர்ணா யாதவ்
முலாயம் சிங் யாதவின் இன்னொரு மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது சமாஜ்வாதி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் கட்சியினரை குஷிப்படுத்தும் வகையிலும், யாதவ் பிரிவினர் மற்றும் பிற ஓபிசி பிரிவினர் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் அகிலேஷ் யாதவ் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications