உ.பியில் மீளும் மண்டல் எழுச்சி.. பாஜகவிற்கு எதிராக அணி திரளும் ஓபிசிக்கள்? அகிலேஷின் மாஸ்டர் பிளான்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஓபிசி பிரிவு தலைவர்கள் மிகப்பெரிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிசி மக்களின் வாக்குகள்தான் இந்த தேர்தலில் முடிவுகளை தீர்மானிக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள். மண்டல் கமிஷன் இருந்த 1978 காலகட்டத்தில் காணப்பட்ட அதே எழுச்சி இப்போது மீண்டும் உத்தர பிரதேசத்தில் தென்பட தொடங்கி உள்ளது.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வரிசையாக அங்கு ஓபிசி தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த செய்தியை எழுதிக்கொண்டு இருக்கும் நேரம் வரை 3 அமைச்சர்கள் உட்பட 10 எம்எல்ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறி உள்ளனர். இதில் ஒருவர் பகுஜன் சமாஜில் சேர இருக்கிறார்.
மற்றவர்கள் சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியம் ஆகிறார்கள். வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில் பாஜகவிற்கு இது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக மாறியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு ஜூலிக்காக..சிதற விட்டதை எண்ணி சிரிக்கும் நெட்டிசன்கள்
எழுச்சி பெரும் மண்டல்
பாஜகவில் பிறப்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள், சிறுபான்மையினர் சரியாக மதிக்கப்படவில்லை. அவர்களுக்கான முழு உரிமை வழங்கப்படுவது இல்லை. வேலைவாய்ப்பில் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். பாஜகவோடு இருந்தால் எங்கள் ஜாதி மக்களே எங்களுக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று கூறி பாஜகவில் இருந்து மூத்த ஓபிசி தலைவர்கள் வெளியேறி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு இது மிகப்பெரிய ஷாக்காக அமைந்துள்ளது.
பாஜகவின் வெற்றிக்கு காரணம்
கடந்த 2017 சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஓசி மற்றும் ஓபிசி பிரிவினர் வாக்குகள்தான். யாதவ் ஜாதியை தவிர மற்ற பெரும்பாலான இடைநிலை ஜாதி வாக்குகள் பாஜகவிற்குதான் சென்றது. ஓசி வாக்குகளும் கூட பாஜகவிற்குதான் சென்றது. தற்போது ஓபிசி வாக்குகளை அப்படியே பாஜகவிடம் இருந்து பிடுங்கி , அக்கட்சியை வெறும் ஓசி பிரிவினருக்கான கட்சியாக சுருக்கும் வேலையைத்தான் அங்கு அகிலேஷ் யாதவ் செய்து வருகிறார்.. இதுவரை அதில் கொஞ்சம் வெற்றியும் கண்டுவிட்டார். 2017ல் பாஜக சாதித்ததை இந்த முறை மீண்டும் நிகழ்த்துவது கடினம் தான்.
30 இடங்கள் காலி
ஏற்கனவே பாஜகவிற்கு எதிராக விவசாயிகள் அங்கு கோபத்தில் உள்ளனர். இது போக பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கும் ஸ்வாமி பிரசாத் மவுரியா என்ற மூத்த அமைச்சர் மற்றும் ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாத்பதி, பகவதி சாகர், வினய் சாக்யா, முகேஷ் வெர்மா உள்ளிட்ட பல்வேறு ஓபிசி தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதில் ஸ்வாமி பிரசாத் மவுரியா மட்டும் மேற்கு உத்தர பிரதேசத்தில் 30 இடங்களின் முடிவுகளை தீர்மானிக்கும் வல்லமை கொண்டவர். இந்த ஓபிசி தலைவர்களின் இடமாற்றத்தால் அங்கு இடங்கள் பெரிய அளவில் ஸ்விங் ஆக போகிறது.
சிறிய கட்சிகள்
இன்னும் சில ஓபிசி தலைவர்கள் அங்கு பாஜகவில் இருந்து வெளியேற இருக்கிறார்கள். இது போக இடைநிலை ஜாதி கட்சிகளுடன் அகிலேஷ் கூட்டணி வைக்க தொடங்கி உள்ளார். குட்டி குட்டி கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வருகிறார். சுக்லாதேவ் பாரத் சமாஜ் கட்சி என்ற கட்சி ராஜ்பார் ஜாதியினர் இடையே ஆதிக்கம் கொண்டது ஆகும். அம்மாநிலத்தில் 2 சதவிகித மக்கள் மட்டுமே இந்த ஜாதியில் இருந்தாலும் 20 இடங்களில் இவர்கள் முடிவுகளை மாற்ற கூடியவர்கள். அதேபோல் மஹான் தல் என்ற மவுரியா ஜாதி கட்சியுடன் அகிலேஷ் கூட்டணி வைத்துள்ளார்.
ஆதித்யநாத் கார்ட்
12-15 இடங்களில் இந்த கட்சி முடிவுகளை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டது. அதேபோல் ஆர்எல்டி, அப்னா தல் போன்ற கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அகிலேஷ் பக்கம் வந்து கொண்டு இருக்கின்றன. இதை பார்த்து பதறிப்போன ஆதித்யநாத்தான்.. இந்த தேர்தல் என்பது 80 Vs. 20 என்று கூறினார். அதில் 20 சதவிகிதம் பேர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றார். அதாவது அங்கு மக்கள் தொகையில் 80 சதவிகிதம் பேர் இந்துக்கள், 20 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். இந்துக்களை மொத்தமாக தன் பக்கம் திரட்ட அவர் முயன்றார்.
அகிலேஷ் பிளான்
ஆதித்யநாத் இப்படி பேசி இந்துக்கள் வாக்கை தன் பக்கம் இழுக்க முயலும் போது அகிலேஷ் சத்தமே ஒன்றி இஸ்லாமியர்கள், ஓபிசிகள், தலித் மக்களின் வாக்குகள் என்று 85 சதவிகித வாக்குகளை தன் பக்கம் கொண்டு வர முயன்று கொண்டு இருக்கிறார். அதாவது ஆதித்யநாத் பிளானுக்கு எதிராக 85 Vs 15 என்ற திட்டத்தை களமிறக்க முயன்று வருகிறார் அகிலேஷ். 15 சதவிகித ஓசி வாக்குகள் பாஜகவிற்கு மீதம் உள்ள அனைத்தும் தனக்கு வர வேண்டும் என்ற திட்டத்தில் இஸ்லாமியர்கள், ஓபிசிகள், தலித் மக்களின் வாக்குகளை அகிலேஷ் ஒருங்கிணைத்து வருகிறார்.
மண்டல்
அதிலும் மண்டல் கமிஷன் காலத்தில் இடைநிலை ஜாதிகள், பிறப்படுத்தப்பட்ட ஜாதியினர் எப்படி ஒன்றாக ஓசி பிரிவினருக்கு எதிராக குரல் கொடுத்தனரோ அந்த வரலாறு உத்தர பிரதேசத்தில் மீண்டும் திரும்ப தொடங்கி உள்ளது. 1978 அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் வழங்கிய பரிந்துரை 1989ல் விபி சிங் ஆட்சியில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த காலகட்டம் முழுக்க இடைநிலை ஜாதிகள், பிறப்படுத்தப்பட்ட ஜாதியினர் ஒன்றாக நின்று தங்கள் இடஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தனர். தற்போது அதே வரலாறு மீண்டு வர தொடங்கி உள்ளது.
என்ன காரணம்?
தங்களுக்கு ஆட்சியில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. வேலைவாய்ப்பில் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஓபிசி மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஓபிசி எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து வெளியேறி எதிர்தரப்பில் ஐக்கியம் ஆக தொடங்கி உள்ளனர். இது உத்தர பிரதேச அரசியல் வியூகத்தை மாற்ற தொடங்கி உள்ளது. இதனால்தான் இன்று பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் ஓபிசி பிரிவினருக்கு அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக இடங்கள்
ஓசி பிரிவினருக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்கும் பாஜக இந்த முறை ஓபிசி பிரிவினருக்கு வாய்ப்புகளை வழங்கி உள்ளது. அதன்படி 44 ஓபிசி வேட்பாளர்களுக்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது... இதனால் உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஓபிசி தலைவர்கள் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.