சொல்பேச்சு கேக்கலயாம்.. உத்தரப்பிரதேச டிஜிபியை தூக்கியடித்த யோகி! டம்மி பதவி ஒதுக்கீடு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில காவல்துறை தலைவராக பதவி வகித்து வந்த முகுல் கோயலை அந்த பொறுப்பிலிருந்து நீக்கி வேறு பிரிவுக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநில காவல்துறை தலைவராக பதவி வகித்து வந்தவர் முகுல் கோயல்.
1987 பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான முகுல் கோயல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரப்பிரதேச காவல்துறையின் தலைமை பொறுப்பான குற்றப்பிரிவு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.

உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், சாதி, மத கலவரங்கள், கும்பல் படுகொலைகள், பசுவுக்காக நடக்கும் கொலைகள், கடத்தல் சம்பவங்கள் என குற்றங்களின் கூடாரமாக திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில், அவற்றை தடுக்க டிஜிபி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தான் பதவியேற்கும்போது மாநிலத்தின் குற்றத் தடுப்பில் கவனம் செலுத்துவதுடன் மக்களோடு போலீசாருக்கு இணக்கமான உறவை ஏற்படுத்துவேன் என அவர் உறுதியளித்திருந்தார்.

ஆளும் கட்சியுடன் மோதல்
அப்போது ஆளும் பாஜக கட்சியினருக்கும் இவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுகளை முகுல் கோயல் செயல்படுத்த தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவரது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்ற பேச்சும் உத்தரப்பிரதேசத்தில் அடிபட்டு வந்தது.

கோபமடைந்த யோகி
உத்தரப்பிரதேசத்தில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூட்டிய கூட்டத்தில் டிஜிபி முகுல் கோயல் பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் யோகி ஆதித்யநாத்தும் முகுல் கோயல் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

பதவி பறிப்பு
இந்த நிலையில், குற்றப்பிரிவு டிஜிபி பொறுப்பிலிருந்து முகுல் கோயலை நீக்கிய உத்தரப்பிரதேச அரசு சிவில் பாதுகாப்புத் துறை டிஜிபியாக நியமித்து இருக்கிறது. முகுல் கோயல் தனது பணியில் ஆர்வமின்றி இருந்ததாகவும், அரசு உத்தரவுகளை மதிக்காமல் நடந்துகொண்டதாகவும் உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டம்மி பதவி
சக்திவாய்ந்த குற்றப்பிரிவு டிஜிபி பொறுப்பிலுருந்து முகுல் கோயல் நீக்கப்பட்டது உத்தரப்பிரதேச அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. முகுல் கோயல் நீக்கத்தை தொடர்ந்து கூடுதல் டிஜிபியாக இருந்த பிரசாந்த் குமார் உத்தரப்பிரதேச குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

முகுல் கோயல்
காவல்துறை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள முகுல் கோயல் இதற்கு முன்னதாக அல்மோரா, ஜலான், மெயின்புரி, ஹத்ரஸ், ஆசம்கர், கோரக்பூர், வாரணாசி, சஹாரன்பூர், மீரட் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், சிறப்பு எஸ்.பியாகவும் பணிபுரிந்துள்ளார். இந்தோ - திபெத் எல்லையோர காவல் பிரிவு மற்றும் தேசிய பேரிடர் உதவிப்படையிலும் இவர் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications