நில ஆக்கிரமிப்பு புகார்கள் மீது உடனடி நடவடிக்கை! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: நிலங்களை ஆக்கிரமிக்கும் மாஃபியாக்கள் மீது உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கோரக்நாத் கோயிலில் நேற்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 500 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "கடந்த 6 ஆண்டுகளில் உ.பியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் உத்தரப் பிரதேசத்திலிருந்து நாடு முழுவதும் இளைஞர்கள் வேலைக்கு செல்வார்கள். புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது.

ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்பட்டன. இருப்பினும், நமது மாநிலத்தின் இளைஞர்களுக்கு நமது மாநிலத்திற்குள் வேலை வாய்ப்புகளை உருவாக்க முயன்றுக்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதற்காகதான் நடத்தப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு உள்ளூரில் வேலை என்கிற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மாநிலத்தின் வருவாயும் கணிசமாக உயரும். தற்போது பெறப்பட்டுள்ள மனுக்களில், நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் வந்திருக்கின்றன. இந்த புகார்கள் மீது உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு வலியுறுத்தியுள்ளேன். பாஜக ஆட்சி மக்கள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications