மழையோ, வெயிலோ! பயிர்கள் பாதிக்கப்பட்டால் இனி கவலைப்பட வேண்டாம்! சூப்பர் திட்டத்தை அறிவித்த உ.பி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வேளாண் நிலங்களை அளவீடு செய்ய டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு முறையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் விவசாய மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். இங்கு 70-75% மக்கள் வேளாண் தொழிலைதான் நம்பியுள்ளனர். கோதுமை, உருளைக்கிழங்கு ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய பயிர்களாக இருந்தாலும், பழங்கள், கீரைகள் மற்றும் மலர்கள் வளர்ப்பு போன்றவையும் பிரதான வேளாண் தொழிலாக இருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளை பாதுகாக்க உத்தரப் பிரதேச பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சமீபத்தில், 'அறுவடை காலத்தில் கருகும் பயிர்களுக்கு உரிய இழப்பு' வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இது பரவலாக வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் புதிய திட்டம் ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் முறையில் பயிர்கள் கணக்கெடுக்கப்படும். இதற்கு 'இ-இன்வெஸ்டிகேஷன்' திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை நீட்டிக்கவும், மானியங்களின் நன்மைகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்தவும் இந்த திட்டம் பயன்படும்.
அறுவடை காலத்தில் பயிர்கள் சந்திக்கும் பாதிப்புகள் இந்த திட்டத்தின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தகவல்கள் சேகரித்து வைக்கப்படும். இந்த தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பி, மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதி பெற்று தரப்படும். இதன்மூலம் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்கும். இது அவர்களை நஷ்டத்திலிருந்து பாதுகாக்கும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களுக்கான திட்டங்களுக்கு உ.பி அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications