நோ வைலன்ஸ்.. நோ மாஃபியா.. 6 ஆண்டுகளில் சாதித்தது இதுதான்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் பாஜக பல விஷயங்களை சாதித்திருந்தாலும் வன்முறையையும் மாஃபியாக்களையும் ஒழித்துள்ளதுதான் பெரும் சாதனையாக இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் கூறியுள்ளார்.
மாநிலத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்காக பரப்புரை மேற்கொண்டுள்ள யோகி ஆதித்யநாத் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றியிருந்தார். அதில், "உத்தரப் பிரதேசத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த மாஃபியாக்களை பாஜக அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இதுதான் எங்களின் 6 ஆண்டு சாதனை" என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர் சட்டம் ஒழுங்கை சரியாக பராமரித்ததற்காக காவல்துறையை பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக ஆட்சி பொறுப்பு வருவதற்கு முன்னர் இந்த மாநிலத்தின் நிலைமை அனைவருக்கும் தெரியும். எங்கு பார்த்தாலும் கலவரம், சண்டைகள், கடத்தல், உயிரிழப்புகள் என மாநிலம் ஒரு போர்க்களம் போன்று இருந்தது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த சவாலை முதலில் சரி செய்வது என்று முடிவெடுத்தோம். அதன்படி காவல்துறையின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையில் காலியாக இருந்த இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டன. அதேபோல கலவரங்களை கட்டுப்படுத்த அவர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன. பின்னர் காவல்துறை முழு வீச்சில் களமிறக்கப்பட்டது.
அவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்தனர். சட்டத்திற்கு அடிபணியாத குற்றவாளிகள் மீது என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. பலர் இந்த என்கவுன்ட்டர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஆனால் இதுதான் மாநிலத்தில் அமைதியை சாத்தியமாக்கியுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் உ.பி காவல்துறையில் போதுமான அளவில் காவலர்கள் இருக்கவில்லை. ஊழல் இதில் மலிந்து கிடந்தது. அடிப்படை கட்டமைப்புகள் மிகவும் மோசமானதாக இருந்திருக்கிறது. அரசுக்கும் - காவல்துறைக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது.

இதனை பாஜக அரசு புரிந்துக்கொண்டது. காவல்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ச்சியாக பேசினோம். ஊழலை ஒழிக்க அனைவரின் உதவியையும் நாடினோம். அதேபோல சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படுவதை தவிர இங்கு வேறு எதுவும் பிரதானமானது கிடையாது என்பதை காவல்துறைக்கு எடுத்துரைத்தோம். இப்படியாகதான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கென என்கவுண்டர் கொள்கை என்று ஒன்று தனியாக கிடையாது. எனவே இது தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை. குற்றவாளிகளை கைது செய்ய முயற்சிக்கும்போது அவர்கள் நடத்தும் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும்போதுதான் இந்த அசம்பாவிதங்கள் நடக்கின்றன. எனவே இதனை பெரியதாக பேச வேண்டிய அவசியமில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகளின் தாக்குதலுக்கு காவல்துறையினர் பயந்திருந்தனர். தற்போது குற்றவாளிகள் பயந்துக்கொண்டிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications