6 ஆண்டுகளில் 55 லட்சம் மக்களுக்கு வீடுகள்.. வளர்ச்சிக்கு முக்கியத்துவம்! அசத்தும் உ.பி அரசு
லக்னோ: கடந்த 6 ஆண்டுகளில் 55 லட்சத்திற்கும் அதிகமான பட்டியல் சமூக மக்கள் வீடுகளை பெற்றிருக்கிறார்கள் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கு பாஜக அரசுதான் காரணம் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் முதலமைச்சரின் ஆவாஸ் யோஜனா ஆகியவற்றின் கீழ் கடந்த ஆறரை ஆண்டுகளில் 55 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மக்கள் இலவச வீட்டு வசதிகளைப் பெற்றுள்ளனர் என கூறியுள்ளார். கோரக்பூரில் உள்ள யோகிராஜ் பாபா கம்பீர்நாத் ஆடிட்டோரியத்தில் ரூ.175 கோடி மதிப்பிலான 116 வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டிய ஆதித்யநாத் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசம் என்றாலே சுகாதாரம் இல்லாத ஒரு இரண்டாம் தர மாநிலமாகத்தான் கடந்த ஆட்சி காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் டபுள் என்ஜின் அரசாங்கம் சுமார் 3 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. பாஜக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்தையும் ஏறத்தாழ நிறைவேற்றியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications