சாமானியர்களுக்கு தரமான மருத்துவம்! பாஜக கனவு நினைவாகி வருகிறது என யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: தரமான மருத்துவ சிகிச்சைக்கு உத்தரப் பிரதேச மாநிலம் பெயர் பெற்றிருக்கிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும், இம்மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வெளிநாடுகளிலிருந்து கூட பலர் வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்க மாநில பாஜக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு காலத்தில் மருத்துவமனை என்றால் டெல்லிக்கும், மும்பைக்கும் ஓடிக்கொண்டிருந்த உத்தரப் பிரதேச மக்கள் தற்போது நமது மாநிலத்திலேயே தரமான சிகிச்சையை பெற்று வருகின்றனர்.

சாமானியர்கள் பயனடையும் வகையில் மாநிலம் முழுவதும் மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது ஏறத்தாழ 50 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. இது பயன்பாட்டுக்கு வரும் நிலையில் சாமானிய மக்களின் துயரங்கள் காணாமல் போய்விடும். இதுமட்டுமல்லாது மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றன.
குறிப்பாக புற்றுநோய் துறையில் தனியார் மருத்துவமனைகள் ஆற்றும் பங்கு மகத்தானது. இதனால் ஏராளமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இது எல்லாம் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசாங்கத்தால் சாத்தியப்படுத்தப்பட்டிருக்கிறது" என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications