கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.. உ.பி முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையில் பாஜக அரசு புத்துயிர் ஊட்டியுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதற்கேற்றவாறு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டிலும் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதாவது தொழில் வளர்ச்சி, மருத்துவம் மற்றும் கல்வியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மட்டுமல்லாது வேளாண் தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "கடந்த காலங்களை விட பாஜக ஆட்சி காலத்தில் மாநிலத்தில் கூடுதல் முதலீடுகள் குவிந்துள்ளது. 2017ம் ஆண்டுக்கு முன்னர் வரை உத்தரப் பிரதேசத்தில் குண்டர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது, பாஜக தற்போது மக்களுக்கான, விவசாயிகளுக்கான, தொழிலாளர்களுக்கான ஆட்சியை வழங்கி வருகிறது.
வேளாண் தொழிலை ஊக்கப்படுத்தும் விதமாக மானிய விலையில் டிராக்டர்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கரும்பு விவசாயம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதன் மூலம் கரும்பு மட்டுமல்லாது எத்தனாலும் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் வேளாண்மை என்பது ஒரு நஷ்டமடையும் தொழிலாக இருந்தது. வயல்களில் கரும்பு எரிக்கப்பட்டது. அதேபோல மாதத்தில் சில நாட்கள் மட்டுமே கரும்பு ஆலைகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இது லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது.
முன்பை விட விவசாயிகள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கரும்பை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உரிய ஆதார விலை வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் தற்கொலை குறைந்திருக்கிறது. சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் எரிபொருள் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு மாற்றாகதான் நாங்கள் எத்தனாலை உற்பத்தி செய்கிறோம். தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தை போல வேறெந்த மாநிலமும் அதிக அளவு எத்தனாலை உற்பத்தி செய்வதில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications