செம.. சுகாதாரம் + உட்கட்டமைப்பு! வளர்ச்சியை சாத்தியமாக்கிய உத்தரப்பிரதேசம்.. முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: அனைத்து நலத்திட்டங்களையும் அமல்படுத்துவதில் உத்தரப் பிரதேசம்தான் டாப்பில் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இன்று எதிர்க்கட்சிகள் பாஜக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆனால் இந்த ஆட்சியில்தான் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. 6 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் வறுமை பரவி கிடந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை தொடங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டன. அல்லது பாதிவரை மட்டுமே முடிக்கப்பட்டன.

இதனால் மக்களுக்கு தேவையான எதுவும் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே மக்கள் வேலைக்காகவும், பிழைப்புக்காகவும் வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை தேட தொடங்கினர். ஆனால் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மக்கள் நலத்திட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. சொல்லப்போனால் நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் உத்தரப் பிரதேசம்தான் முதலிடத்தில் இருக்கிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், இதுவரை 1.74 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல விரைவு சாலைகள் மாநிலத்தின் போக்குவரத்தை மேலும் சுலபமாக்கியுள்ளது. வெளி மாநிலத்திலிருந்து வரும் பொருட்கள் வேகமாகவும் விரைவாகவும் இங்கு வந்து சேரும். அதேபோல இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் வெளி மாநிலத்திற்கு விரைவாக ஏற்றுமதி செய்ய முடிகிறது. இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மற்றொருபுறம் தெருவோர வியாபாரிகளுக்கு பராமரிப்பு நிதி வழங்குவதிலும் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மேலும் அடல் பென்ஷன் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் அதிக அளவில் மக்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த திட்டங்கள் மற்ற மாநிலங்களில் அமல்படுத்தப்படுவதைவிட உத்தரப் பிரதேசத்தில் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல உத்தரப் பிரதேசத்தின் மற்றொரு பலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள்தான். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 96 லட்சம் MSMEக்கள் இருக்கின்றன. நாட்டின் வேறெந்த மாநிலங்களிலும் இந்த அளவுக்கு MSMEக்கள் கிடையாது. இந்த MSMEக்கள் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே MSMEக்களுக்கு தேவையான பல திட்டங்களையும் பாஜக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் ஏராளமான MSMEக்கள் மேலும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளன.
அதேபோல விவசாயிகளுக்கான மானியங்களை அவர்களது வங்கி கணக்கில் உத்தரப் பிரதேச அரசு தவறாமல் செலுத்தி வருகிறது. மற்றொருபுறம் கல்வி சார்ந்த திட்டங்களையும் நாங்கள் சரியாக செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி எனும் இலக்கை நோக்கி உத்தரப் பிரதேசம் சென்றுக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications