அரசு பள்ளி குழந்தைகளுக்கு உ.பி அரசு அறிவித்த சூப்பர் திட்டம்! அசத்தும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 3-6 வயது குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமல்படுத்தியுள்ளார். திட்டத்தை தொடங்கி வைத்த அவர், நல்ல ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள்தான் வலுவான இந்தியாவுக்கு அடிப்படை என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் 3-6 வயது குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ளார். அயோத்தியில் உள்ள ஒரு கூட்டுப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அவர், குழந்தைகள்தான் வலுவான இந்தியாவுக்கு அடிப்படை என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் மீண்டும் கோயிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட இருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்கு முன், 3-6 வயது குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது 35 மாவட்டங்களில் ரூ.403 கோடியில் 3,401 அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள துறைகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து பயணித்தால் வளர்ச்சி எளிதில் சாத்தியமாகும். கடந்த காலத்தில் நாம் இப்படிதான் பணியாற்றி இருக்கிறோம். உதாரணமாக மூளை காய்ச்சலை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த 40 ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகளின் உயிரை இது பறித்திருக்கிறது. ஆனால் நம்முடைய கூட்டு முயற்சியால் நாம் வெறும் 4 ஆண்டுகளில் இதை ஒழித்து கட்டினோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications