உத்தர பிரதேசத்தின் சிறப்பு வாய்ந்த நகரங்களின் பெருமைகளை மீட்டது பாஜகதான்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரின் பெருமையை மீட்டெடுக்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய லோக்தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தவறிவிட்டதாகவும் பாஜக மட்டுமே இடந்த பெருமையை மீட்டெடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்காக யோகி ஆதித்யநாத் தொடர் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். முதற்கட்ட தேர்தல் கடந்த 4ம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் 11ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நேற்று மீரட் நகரில் பிரசாரத்தை மேற்கொண்டிருந்த யோகி ஆதித்யநாத், "இந்நகரின் பெருமையை மீட்டெடுத்தது பாஜகதான்" என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது, "மீரட் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். ஏனெனில் இங்குதான் இந்தியாவின் முதல் புரட்சி போராட்டம் வெடித்தது. கடந்த 1857ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இந்த புரட்சி வெடித்தது. இது ஒட்டுமொத்த இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியது. அதேபோல 11ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மீரட் மக்கள் முழு அளவில் பங்கேற்று டபுள் என்ஜின் அரசை ட்ரிபிள் என்ஜின் அரசாக மாற்ற புரட்சி செய்ய வேண்டும். மீரட் குறித்து பாஜக புரட்சிகர சிந்தனையை கொண்டிருக்கிறது.
ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் மீரட் என்பது திருடப்பட்ட கார்களிலிருந்து உதிரி பாகங்களை அகற்றி அதனை பிரித்து விற்கும் நகரமாக அறியப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மீரட் நகருக்கு இந்த இந்த பெயரை மாற்றி மீரட் என்றால் வளர்ச்சி மற்றும் தேசியவாதம் பற்றிய நேர்மறையான சிந்தனைக்கு பெயர் பெற்ற நகரம் என்று மாற்றியது. மீரட்டை போலவே இந்தியாவின் பெயரும் சர்வதேச அளவில் வேறுமாதிரி ஒலிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்னர் இந்தியா என்றால் ஏளனமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியா மீது சர்வதேச நாடுகளுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டுள்ளது. இதற்கும் பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும்தான் காரணம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியிலிருந்து மீரட் வர சுமார் 4 மணி நேரம் வரை ஆகும். ஆனால் பாஜக அரசு 12 வழி விரைவு சாலையை கட்டமைத்தது. இதன் பின்னர் டெல்லியிலிருந்து மீரட்டுக்கு சுமார் 45 நிமிடங்களில் வந்துவிடலாம். சாலை போக்குவரத்து எளிதாக்கப்பட்டதை போல ரயில் போக்குவரத்தையும் எளிதாக்க பாஜக அரசு முயன்று வருகிறது.
இந்த முயற்சியின் பலனாக அடுத்த ஆண்டு டெல்லி-மீரட் விரைவு ரயில் சேவை தொடங்கப்படும். அதேபோல மீரட்டில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல ஒரு காலத்தில் 16 மணி நேர் செலவானது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் நாங்கள் விரைவு சாலைகளை கட்டி எழுப்பினோம். இதனால் 16 மணி நேர பயணம் 6 மணி நேரத்தில் சாத்தியமாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications