ஏழைகள், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வை கண்டது பாஜக அரசுதான்! யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் விவசாயிகளின் பிரச்னைக்கு பாஜக உரிய தீர்வை கொடுத்து வருகிறது என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வு, வறட்சி, விளைபொருட்களுக்கான உரிய தொகை, தலித்துகள் மீதான தாக்குதல் போன்றவற்றை குறித்து மாநில எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்து பேசிய யோகி ஆதித்யநாத், "சமாஜ்வாடி கட்சி நான்கு முறை ஆட்சியில் இருந்தும் எதையும் சாதிக்க முடியவில்லை. கிழக்கு உ.பி.யில் மூளைக்காய்ச்சல் நோய் 40 ஆண்டுகளில் 50,000 குழந்தைகளின் உயிரைக் கொன்றது. ஆனால் இன்று கடுமையாக விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகள் அன்று வாயை மூடி மவுனம் காத்தன.

பாஜக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட்டது. இன்று உத்தரப் பிரதேசத்தில் மூளைக்காய்ச்சல் நோய் எங்கும் கிடையாது. எதிர்க்கட்சிகள் ஆயுஷ்மான் பாரத் சுவிதா திட்டத்தை ஏளனமாக பார்க்கிறார்கள். இதன் மூலம் சுமார் 10 கோடி பேர் பயனடைந்துள்ளனர். அதேபோல அரசு மருத்துவமனைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்கும்போது உத்தரப் பிரதேசத்தில் மருத்தவமனைகள் பாழடைந்த கட்டிடங்களாக இருந்தன.
நாங்கள் பொறுப்பேற்ற பின்னர் தற்போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டி வருகிறோம். இதில் ஏறத்தாழ பாதி மாவட்டங்களில் இந்த மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. அதே போல மீதமுள்ள மருத்துவமனைகளின் பணிகள் 90 சதவிகிதம் முடிந்துவிட்டன. பாஜக அரசுதான் ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வை கொடுத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications