சுகாதார கட்டமைப்பில் அதிரடி காட்டும் யோகி அரசு! உ.பியில் இரண்டாவது தாய்ப்பால் வங்கி இன்று திறப்பு
லக்னோ: கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வங்கியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைக்கிறார். இது மாநிலத்தின் இரண்டாவது தாய்ப்பால் வங்கியாகும்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதலமைச்சராக யோகி தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலமைச்சராக யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் வரை நீடித்ததில்லை. அந்த வகையில் யோகி புதிய சாதனை படைத்திருக்கிறார். எனவேதான் இதனை மாநில அரசு இதனை சிறப்பாக கொண்டாடி வருகிறது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்களை யோகி தொடங்கி வைத்து வருகிறார். இன்று கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வங்கியை தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே லக்னோவிலுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதல் தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டது. அந்த வகையில் இது இரண்டாவது தாய்ப்பால் வங்கியாகும். இந்த திறப்பு விழாவில் முதலமைச்சருடன் பிஆர்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கணேஷ் பிரசாத் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண கருணேஷ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்த திட்டம் குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் கணேஷ் பிரசாத் கூறுகையில், "சில பிரச்னைகள் காரணமாக ஒரு சில தாய்மார்களால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க முடிவதில்லை. அப்படிப்பட்ட தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த தாய்ப்பால் வங்கி ஓரு வரப்பிரசாதமாகும். பெண்களின் முன்னேற்றம், குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. நடப்பாண்டு பட்ஜெட்டில் மாவட்டம் தோறும் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது.
இது ஓர் அற்புதமான திட்டம். சுகாதாரத்திலும், மருத்துவத்திலும் உத்தரப் பிரதேசம் மற்றொரு பெரிய அடியை எடுத்து வைக்க இருக்கிறது. அதற்கான அடித்தளம்தான் இந்த திட்டங்கள்" என்று கூறியுள்ளார். அதேபோல பெண்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications