மாவட்டத்திற்கு ஓர் மருத்துவக் கல்லூரி! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு.. விரைந்து முடிக்க திட்டம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வரும் 2027ம் ஆண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உ.பியின் முதலமைச்சராக யோகி கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றார். அப்போது இம்மாநிலத்தில் மொத்தம் 12 மெடிக்கல் காலேஜுகள் மட்டுமே இருந்தன. ஆனால் 2017 முதல் தற்போது வரை இந்த எண்ணிக்கையை யோகி தலைமையிலான பாஜக அரசு 35ஆக உயர்த்தியிருக்கிறது. மேலும் இதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரிகளை உருவாக்க யோகி உத்தரவிட்டார். உ.பியில் மொத்தம் 75 மாவட்டங்கள் இருக்கின்றன.

இதில் மேலும் 14 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கின. இதில் 13 கல்லூரிகளின் கட்டுமான பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. இவை விரைவில் திறக்கப்படும். இதன் மூலம் அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட இந்தியாவின் முதன்மை மாநிலம் என்கிற பெயரை உத்தரப் பிரதேசம் பெறும். அதேபோல இந்த ஆண்டு இறுதிக்குள் 59 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அரசுகள் எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை என்றும் இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார்கள் எனவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற பிர்ச்னைகள் இருக்காது என்றும் அவர் உத்தரவாதம் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications