உ.பி மக்களின் கனவுக்கு குறுக்கே நிற்கும் அதிகாரிகள்! கடுமையாக எச்சரித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சில அரசு அதிகாரிகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
உ.பியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மூலம் ரூ.34 லட்சம் கோடி வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மற்றொரு நிகழ்வும் இடம் பிடித்துள்ளது. அதாவது, உ.பி முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதுவரை இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்ததில்லை.

எனவே யோகி ஆதித்யநாத் ஆட்சியின் 6 ஆண்டுகள் நிறைவு விழாவை பாஜக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முடிவுற்ற திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில மாவட்டங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மறுபுறம் சட்டம் ஒழுங்கை காப்பதிலும் காவல் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக தொடர் புகார்கள் எழுந்திருக்கிறது. எனவே இந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தற்போது யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்திருக்கிறது. இது குறித்து இன்று விளக்கியுள்ள யோகி ஆதித்யநாத், "மக்கள் குறைகளை சரி செய்யாத அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சாதாரண போலீஸ் ஸ்டேஷன் காவலர் தொடங்கி அரசின் உயர் மட்ட அதிகாரிகள் வரை இந்த தவறை செய்துள்ளார்கள். இவர்களுக்கு ஏற்கெனவே பல முறை வார்ணிங் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார். இது அம்மாநில அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications