மோடி மீண்டும் பிரதமராக 72% மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களாம்.. ஜீ நியூஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பு!
லக்னோ: ஜீ டிவி நடத்தியக் கருத்துக்கணிப்பில் 72% இந்தியர்கள் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வரவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
Recommended Video
உத்தரப்பிரதேச தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஜீ நியூஸ் ஊடகம் மிகப்பெரிய அளவில் கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில், 2024 நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 72% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகள் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, அடுத்த மாதம் 10ம் தேதி துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச தேர்தலைப் பொறுத்தவரை, பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளில் ஒன்று தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. அகிலேஷ் யாதவ் பாஜக-வுக்கு சரிசமமாக போட்டியைக் கொடுக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் நடத்தி, அந்த முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. ஏபிபி சிவோட்டர், இந்தியா டிவி, ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்புகளில் பாஜக 220-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் சமாஜ்வாதி கட்சி 160-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் வந்துள்ளன.

ஜீ நியூஸ்
இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது ஜீ நியூஸ். டிசைன் பாக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, உத்தரப்பிரதேசத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற கருத்துக் கணிப்பை மிகப் பெரிய அளவில் நடத்தி இருக்கிறது ஜீ நியூஸ். கருத்துக்கணிப்பு முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது ஜீ நியூஸ்.

முடிவுகள்
உத்தரப்பிரதேசத்தின் அடுத்த முதல்வராக பாஜக-வின் யோகி ஆதித்யநாத் வருவார் என 47% பேரும், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவுக்கு 35% பேரும், மாயாவதிக்கு 9%, பிரியங்கா காந்திக்கு 5% பேரும், மற்றவர்களுக்கு 4% பேரும் அடுத்த முதல்வர் கருத்துக் கணிப்பில் வாக்களித்திருக்கிறார்கள்.

மோடி
2022 உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. அதோடு, 2024 நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 72% இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் கருத்துக்கணிப்பு முடிவை ஜீ நியூஸ் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications