கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஷாக்கில் மதுரை
மதுரை அருகே சோழவந்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேர் வாந்தி, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோன்று ஷவர்மா சாப்பிட்ட பலருக்கும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக பலரும் ஷவர்மா சாப்பிடுவதை தவிர்த்தனர். தற்போது கிரில் சிக்கன் சாப்பிட்டவர்களுக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தானில் உள்ள உணவகத்தில் நேற்று இரவு கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்ட 22 பேருக்கு நள்ளிரவு முதல் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. கூடைப்பந்து விளையாட வந்த பிரசன்னா என்ற வீரர் தனது நண்பர்கள் 10 பேருடன் இந்த உணவகத்தில் சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர்களுக்கும் உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழவந்தான் அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் உட்பட சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உணவகத்தில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும், சோழவந்தான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோட்டலில் இருந்த உணவு மற்றும் நேற்று பயன்படுத்தப்பட்ட சிக்கன் ஆகியவற்றை கைப்பற்றிய உணவு பாதுகாப்புத் துறையினர், அதனை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். ஒரே இரவில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சோழவந்தான் பகுதியே பரபரப்பாக உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications