"காந்தாரா".. அருள் வந்து ஆடிய 3 வயது குழந்தை.. மெய்சிலிர்த்து நின்ற மக்கள்.. மதுரை மண்ணில் "அதிசயம்"
3 வயது குழந்தை அருள் வந்து ஆடிய சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது.
மதுரை: மதுரையில் 3 வயதே ஆன குழந்தை ஒன்று அருள் வந்து ஆடிய வீடியோதான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி மக்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோயில் திருவிழாவில் திடீரென இந்தப் பிஞ்சுக் குழந்தை அருள் வந்து ஆடியதை கூட்டத்தில் இருந்தவர் பிரமித்து பார்த்தனர்.
இதுவரை குழந்தை ஒன்று அருள் வந்து ஆடியது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட இந்த சம்பவம் வியந்து பார்க்க வைத்துள்ளது.

அருள் ஆட்டம்..
பொதுவாக, கோயில் திருவிழாக்களில் பெண்கள் பலர் அருள் வந்து ஆடுவதை பார்த்திருப்போம். சாமியாடுகிறார்கள் என பேச்சு வழக்கில் இதை நாம் குறிப்படுவது உண்டு. அவர்கள் வழிபடும் தெய்வம், பக்தியின் உச்சத்தில் அவர்கள் மீது இறங்கி அவர்கள் வாயிலாக அருள் வாக்கு கூறுகிறது என ஆன்மீக ரீதியில் இதை கூறுகிறார்கள். ஒருமுறை அருள் வந்தவர்களுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அருள் வரும் எனக் கூறப்படுவதும் உண்டு. அவ்வாறு அருள் வரும் போது, மிக சாந்தமான பெண்கள் கூட மிக ஆக்ரோஷமாக மாறுவார்கள். அந்த சமயத்தில், அவர்களை பல ஆண்களால் கூட தடுக்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு பலம் வந்துவிடும். மேலும், முன்பின் தெரியாதவர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை கூட அருள் வந்தவர்கள் சரியாக கூறுவார்கள்.

மறுக்கும் அறிவியல்
ஆன்மீக ரீதியில் இது பார்க்கப்பட்டாலும் அறிவியலும், மருத்துவமும் இதை ஏற்றுக்கொள்வதில்லை. அருள் வந்து ஆடுபவர்கள் மீது உண்மையில் சாமி ஏதும் இறங்கவில்லை எனக் கூறும் அவர்கள், இதனை 'பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்' (Personality Disorder) என அழைக்கிறார்கள். அதீத பக்தியில் ஒருவர் இருக்கும் போதும் அவரது மனம் கட்டுப்பாட்டை இழப்பதாகவும், அந்த சமயத்தில் தன்னை அந்த தெய்வமாகவே அவர்கள் நினைத்துக் கொள்வதாலும் இது நடக்கிறது என மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

3 வயது குழந்தை
இந்த சூழ்நிலையில்தான், மதுரையில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் அறிவியல் பேசும் மருத்துவர்களையே வியப்படைய செய்துள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வீரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று அந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து கொண்டிருக்க, 3 வயது குழந்தை திடீரென சத்தமாக அலறியது. குழந்தையை ஏதோ கடித்துவிட்டது என பெற்றோர் நினைத்த வேளையில், நாக்கை மடித்துக்கொண்டும், கண்களை மேலே பார்த்தபடியும் ஆக்ரோஷமாக அந்த குழந்தை ஆடியது.

எப்படி சாத்தியம்?
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் பிரம்மிப்பில் உறைந்து போயினர். பின்னர் சிறிது நேரம் அருள் வந்து ஆடிய குழந்தை அங்குள்ளவர்களுக்கு மழலை மொழியில் அருள் வாக்குகளை கூறியது. இதையடுத்து, சில நிமிடங்களில் அந்தக் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. பெரியவர்கள் அருள் வந்து ஆடும்போது, அதீத பக்தியால் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் நிகழ்க்கிறது என அறிவியல் உலகம் கூறுகிறது. அப்படியென்றால் உலகமே அறியாத 3 வயது குழந்தை எப்படி அருள் வந்து ஆடுகிறது என ஆன்மீகவாதிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications