படையலில் 470 கிடாக்கள்... மதுரை அருகே முனியாண்டி கோயிலில் ஆட்டுக்கறி அன்னதான விழா கோலாகலம்
மதுரை: வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவிலில் 470 ஆடுகளை வெட்டி நடத்தப்பட்ட கறி விருந்தில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Recommended Video
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில்.
இந்த கோயிலின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 470 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.
முனியாண்டி கோயில்
மதுரை திருப்பரங்குன்றம் விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள வெள்ளக்கல் கிராமத்தில் கழுங்கடி முனியாண்டி கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டிக்கு ஆடுகளை பலியிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர். இந்த கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கறி விருந்து அன்னதான திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
திருவிழா
இதனை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட ஆடுகளை இரவு முழுவதும் வெட்டி சமைத்து காலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கிடாயுடன் பொங்கல் பானை ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முனியான்டி கோயிலுக்கு முன் ஆடுகள் பலியிடப்பட்டன.
பக்தர்கள் நம்பிக்கை
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில் பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், காரியபட்டி போன்ற சுற்று வட்டார ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த முனியாண்டி கோவிலில் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது கூட வெள்ளக்கல் பகுதிகளில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்பட்டதில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.
470 ஆடுகள் பலி
இந்த கோவிலில் முதல் முதலாக எங்கள் பிரச்சனை தீர ஒரு ஆட்டுக்கிடா வெட்டி கோவில் திருவிழா நடத்தப்பட்டதாகவும் தற்போது 470-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டு இந்த ஆட்டுக் கிடாய் கறி விருந்து திருவிழா நடைபெறுகிறது என்றும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெட்டப்பட்ட 470 ஆடுகளை கொண்டு கறி விருந்து சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.