மட்டனுக்கு பெயர் போன மதுரையில் இப்படியா.. என்னண்ணே.. இப்படி பண்ணினா எப்படிண்ணே!
மதுரையில் 500 கிலோ தரமற்ற ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை: வர வர மட்டன் சாப்பிடறதா? வேண்டாமான்னே தெரிய மாட்டேங்குது. இப்படி நாளுக்கு நாள் பீதியை கிளப்பிட்டு இருந்தா எப்படி?
இப்படிதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி சென்னையில, ஆட்டுக்கறிக்கு பதிலாக பூனைக்கறி போட்டுடறாங்கன்னு சொன்னாங்க. அதை கேட்டு ஆடிப்போன நம் மக்கள் பிரியாணி பக்கமே தலைவெச்சுக்கூட படுக்காம இருந்தாங்க.
அந்த பீதி மெதுவா அடங்க ஆரம்பிச்சி, திரும்பவும் வழக்கம்போல மக்கள் பிரியாணியை ரவுண்டு கட்டி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
நாய்க்கறி
நான்கு நாட்களுக்கு முன்னாடி பூனை போய் நாய் வந்தது. நாய்க்கறியா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே அதுக்கு நாய்க்கறி பிரியாணின்னு பெயரும் பரப்பிவிட்டு நிறைய ஹோட்டல்களில் ஜனங்களை காணோம். நாய்க்கறி, பூனைக்கறி என்று சாப்பிட்டு ஒன்னுக்கிடக்க ஒன்னு ஆகிட போகுது என்று நினைத்து பீதியாகி கிடக்கின்றனர்.
500 கிலோ
இப்போதும் இறைச்சி சம்பந்தமான பிரச்சனை மதுரையில் ஏற்பட்டுள்ளது. நாயோ, பூனையோ இல்லை... ஆடுதான்... ஆட்டிறைச்சியேதான். ஆனால் கெட்டுப்போன ஆட்டிறைச்சியாம். மதுரை மாவட்டத்தின் நகராட்சிப் பகுதியிலேயே இதை விற்பனை செய்ய முயன்றதுதான் ஆச்சரியமே. ஒரு கிலோ, 2 கிலோ இல்லை.. விற்பனைக்கு வைக்கப்பட்டது மொத்தம் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியாம்!
கெட்டுப்போன இறைச்சி
திடீரென்று சுகாதார அலுவலர்கள் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு இன்று நடத்த வந்தார்கள். அப்போதுதான் இறைச்சிக் கடைகளுக்கு சென்று தரத்தினை சோதித்தபோது ராஜாஜி தெருவில் முகம்மது ராஜா என்பவரின் கடையில் ஹோட்டலுக்கு சப்ளை செய்வதற்காக 300 கிலோ ஆட்டிறைச்சி வைத்திருந்தார்கள். அவை கெட்டுப்போன இறைச்சி என்பதை கண்டுபிடித்தார்கள்.
பினாயில் ஊற்றி அழித்தனர்
அதேபோல வேறு கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தியதில், 200 கிலோ ஆட்டுக்கறி சுகாதாரமின்றியும் கெட்டுப்போய் கிடப்பதை கண்டுபிடித்தார்கள். இப்படி கெட்டுப்போன ஆட்டிறைச்சி எல்லாவற்றையும் ஒரு இடத்தில் போட்டு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அதனை அழித்தார்கள். பூனையோ, நாயோ என்றால்கூட வாங்காமல் விட்டு ஒதுங்கி ஓடிவிடுவோம். இப்படி ஆட்டுக்கறியையே கெட்டு போய் விற்றால் அது விஷம் அல்லவா? மட்டன் என்றாலே மதுரை இப்போது ஓட்டம் பிடிக்கிறது!!