எஸ்கிலேட்டரால் நேர்ந்த விபரீதம்.. 5ஆம் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்.. மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரையிலுள்ள பிரபல ஜவுளிக்கடை மாடியில் இருந்து தவறி விழுந்து 7வயது சிறுவன் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை எஸ்.எஸ்.காலனி அருகேயுள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார். இவரது மனைவி மற்றும் 7வயது மகன் நித்திஸ் தீனா ஆகியோர் நேற்று மதுரை அழகப்பன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளி பண்டிகைக்காகத் துணி எடுக்கச் சென்றுள்ளனர்.
இதையடுத்து தீபாவளி துணிகளை வாங்கிவிட்டு 5வது மாடியில் இருந்து எஸ்கிலேட்டர் வழியாக இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக எஸ்கிலேட்டர் அருகில் இருந்த இடைவெளியில் சிறுவன் திடீரென சென்றதால் 5வது மாடியிலிருந்து இருந்து அந்த சிறுவன் கீழே விழுந்தான். இதில் அச்சிறுவனுக்குத் தலையில் மோசமான காயம் ஏற்பட்டது.
5ஆவது மாடியில் இருந்து சிறுவன் விழுந்ததால் அடுத்தடுத்து மாடிகளில் இருந்த கல்தூண்கள் சிறுவனின் தலை மோதியது. இதனால் அச்சிறுவனின் தலை உடைந்து, ரத்தம் அதிகளவில் வெளியேறியது..
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுவன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடையில் இருந்த எஸ்கிலேட்டர் அருகில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் உரிய முறையில் இல்லாததே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்கிலேட்டர் அருகில் இருக்க வேண்டிய பாதுகாப்பு தடுப்புகள் உரிய முறையில் இல்லாததே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.