தலித் புல்லட் ஓட்டக்கூடாதா.. புல்லட் பேரணியில் ஈடுபட்ட விசிகவினர் - 170 பேர் மீது வழக்குப் பதிவு
மதுரை: மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடவூர் கிராமத்தில் புல்லட் வாகனத்தில் சமத்துவ வாகனப் பேரணியில் ஈடுபட்ட மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 170 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன், செல்லம்மா தம்பதி. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அய்யாசாமி என்ற மகன் உள்ளார். இவர் சிவகங்கை அரசு கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததால் அவரது தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

பூமிநாதன், கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கியுள்ளார். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த சில முன்னேறிய சாதி இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே அந்த இளைஞர்களுக்கும், அய்யாசாமிக்கு முன்விரோதம் இருந்த நிலையில், பூமிநாதனின் புல்லட் வாகனத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து பூமிநாதன், அய்யாசாமி இருவரும் போலீஸில் புகார் அளித்த நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வீட்டை நோக்கி வந்துள்ளார்.
அப்போது, அந்த 3 இளைஞர்கள் அய்யாசாமியை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ" என்று கூறி அய்யாசாமியின் கையை வெட்டி இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
படுகாயம் அடைந்த அந்த மாணவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சமத்துவ வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு புல்லட் வாகனத்தில் திரண்ட விசிகவினர் நேற்று அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணியானது காந்தி மியூசியம் வரை நடைபெற்றது. புல்லட் பேரணியில் ஈடுபட்ட விசிகவினர் 170 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications