இன்னும் இந்த கொடுமைக்கு முடிவில்லையா? 30 ஆயிரத்துக்காக பறிபோன உயிர்! கந்துவட்டி கும்பல் அடாவடி!
மதுரை : மதுரையில் கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலைக்கு முயற்சி செய்த தம்பதியினரில், சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்தார். இந்நிலையில், மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களை கைது செய்த மேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கந்தப் பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவர் மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வசித்து வரக்கூடிய நிலையில், அதே பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். பேக்கரி நடத்துவதற்கு போதுமான பணம் இல்லாததால் தெரிந்த நபர்கள் மூலம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் ராஜா, 30,000 ரூபாயை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தை திரும்ப செலுத்துவதில் ராஜா காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வினோத் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகியோர் வீட்டிற்கு நேரடியாக வந்து தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. தங்களுடைய இரண்டு பிள்ளைகளின் முன்நிலையில் கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட தம்பதியினர் செய்வதறியாது தவித்துள்ளனர். இவர்களைப் போன்றே பிற நபர்களிடமும் கடன் பெற்றதாக சொல்லப்படும் நிலையில், பேக்கரியை வைத்து கடன் பெற்று அதை திருப்பிக் கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்களுடைய தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் நாம் நால்வரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோமா என்று ராஜாவின் மனைவி தனது இரண்டு மகளிடம் கேட்க அவர்களோ மறுத்துவிட்டதாகவும், இதனையடுத்து கணவனும், மனைவியும் விஷம் குடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டு பக்கத்திற்கு, பத்து நாட்களுக்கு முன்பதாகவே அவர் எழுதிய கடிதத்தில், கடன் கொடுத்தவர்கள் மிகவும் டார்ச்சர் செய்வதாகவும் தங்களுடைய குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் கொடுத்து சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் 12ஆம் தேதி ராஜாவின் மனைவியிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்டு இளைஞர்கள் இரண்டு நபர்களையும் விசாரித்தனர்.
இதற்கிடையே, கடந்த 14 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மனைவி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில் ராஜாவின் சகோதரி இரண்டு மகள்கள் உறவினர்கள் என அனைவருமே அரசு ராஜாஜி மருத்துவமனையை நோக்கி படையெடுக்க தொடங்கினர். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ராஜா மனைவியை விட மகள்கள் மீது தான் அதிக பற்று கொண்டவராக இருப்பார் என கூறி அழுது புரண்டனர்.
தொடர்ந்து, கடன் தொல்லையால் விஷம் அருந்தி சிகிச்சை பலனின்றி உயர்நீத்த ராஜாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக நேற்று ராஜா இறந்ததைத் தொடர்ந்து சிவா மற்றும் வினோத் ஆகிய இருவரையும் மேலூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கந்து வட்டி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications