ஆ.ராசாவின் பேச்சு அபத்தமானது.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. கொந்தளிக்கும் ஆர்.பி.உதயகுமார்!
மதுரை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பேச்சு அபத்தமானது என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
மகாத்மா காந்தி ஆடையை துறந்து புரட்சி ஏற்படுத்தியதன் நூற்றாண்டு நிகழ்வை கொண்டாடும் வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமாரிடம் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக சட்டம் ஒழுங்கின் நிலையைப் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கையாக வைத்துள்ளார். டெல்லியிலேயே ஊடகத்தை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கூறி இருந்தார் என்று தெரிவித்தார்.

வைரஸ் காய்ச்சல் பரவல்
இதன்பின்னர் வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். திருமங்கலம் மருத்துவமனையில் கூட இன்று காலை அதிகளவில் கூட்டம் இருந்தது.

மருந்து, மாத்திரைகள் இல்லை
தமிழக அரசு சார்பாக அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் போதிய மருந்து, மாத்திரைகள் இல்லை என்று குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. உண்மை நிலை அறிந்து, தேவையான மருந்து, மாத்திரைகள் கொடுத்தால் மக்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆ.ராசா மீது விமர்சனம்
தொடர்ந்து ஆ.ராசா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தவர். அவரின் பேச்சு அபத்தமான பேச்சு. எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு குறித்து பேசுவதில்லை. ஆனால் ஆ.ராசாவின் தனது புரிதலின் அடிப்படையில் பேசியுள்ளார். இது ஒரு வேண்டாத விவாதம். ஆ.ராசாவின் கருத்தால் மக்கள் கொந்தளித்துள்ளனர். ஆனாலும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை ஆ.ராசா கருத்து பற்றி பதில் அளிக்கவில்லை. எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லையென்றால், அதற்குரிய தண்டனையை பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

இரட்டை நிலைப்பாடு
தொடர்ந்து ஆம்னி பேருந்து கட்டண உயர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டில் அனைத்து விலைவாசியும் உயர்த்தப்படும். மின்சாரக் கட்டணம், சொத்து வரி போல் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும். இதுகுறித்து கேள்வி கேட்டால், தவிர்க்க முடியாது; ஏற்றுக்கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் பதில் அளிப்பார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு என்று திமுக இரட்டை நிலைப்பாடு கொண்டது என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications