'நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா'.. இளைஞரை கும்பலாக அடித்தே கொன்ற குடும்பம்.. மதுரையில் ஷாக்
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சண்டையை விலக்கிவிட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் தனது குடும்பத்துடன் சேர்ந்து, கும்பலாக அவரை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கிராமம் பெருமாள்பட்டி. இங்குள்ள சேர்வைக்கார தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது மகன் மணிகண்டன், இவருக்கு 26 வயது ஆகிறது. மணிகண்டன் பள்ளபட்டி தொழிற்பேட்டையில் உள்ள பெல்ட் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

கடந்த 9ம் தேதி மணிகண்டனின் மாமா மகன் ஆனந்த குமாரும், அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஜீவாவும் பெருமாள்பட்டி மந்தையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அங்கு வந்த மணிகண்டன் சண்டையை விலக்கி விட்டார். அப்போது ஜீவா, நீ யாரு சண்டையை விலக்கி விடுவதற்கு, நீ அவ்வளவு பெரிய ஆளா உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று மிரட்டிவிட்டு போனதாக கூறப்படுகிது.
இந்தநிலையில் சம்பவம் நடந்த அன்று பெருமாள்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி முன்பு மணிகண்டன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவா, மணிகண்டனிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் தகராறு முற்றி உள்ளது. இதை பார்த்த ஜீவாவின் தந்தை ராமமூர்த்தி, தாய் லலிதா மற்றும் உறவினர்கள் ராஜசேகர், சிவா, சூரிய கலா, சரண்யா, சரத், அஜித் ஆகிய 8 பேரும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக கட்டை, கம்பு, கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் இறந்து போனார். இதையடுத்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்- இன்ஸ்பெக்டர் மாயாண்டி ஆகியோர் மணிகண்டன் இறப்பை கொலை வழக்காக பதிவு செய்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக ஜீவா, ராமமூர்த்தி, லலிதா, ராஜசேகர், சூரியகலா, சரண்யா, சரத், அஜித் ஆகியோரை வலை வீசி தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications