3 அமைச்சர்கள்.. 1 எம்.பி - திமுகவை டார்கெட் செய்த ஆர்.பி.உதயகுமார்.. மக்களே முகம் சுழிக்கிறாங்களாம்!
மதுரை : திமுக அமைச்சர்களின் செயல்பாடு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் மிகப்பெரிய கோபத்திற்கு உள்ளாகி உள்ளனர். அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் மக்கள் முகம் சுளிக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தமிழக அமைச்சர்களின் சர்ச்சை கருத்துகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கருத்துகள் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார் ஆர்பி உதயகுமார். இந்நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எவ.வேலு ஆகியோரின் பேச்சுகள் பற்றியும், திமுக எம்.பி செந்தில் குமாரின் கருத்து பற்றியும் விமர்சித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார்.

அமைச்சர்களின் செயல்பாட்டால் மக்கள் கோபம்
இது தொடர்பாக ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு அமைந்த உடன் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வருவேன் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் அறிக்கை விட்டார். மக்களும் இதை எதிர்பார்த்திருந்தனர். திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் மக்கள் மக்கள் விரோதப் போக்கினை தொடர்வதை போல் தற்போது திமுக அரசு தொடர்கிறது. குறிப்பாக திமுக அமைச்சர்களின் செயல்பாடு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் மிகப்பெரிய கோபத்திற்கு உள்ளாகி உள்ளனர். அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் மக்கள் முகம் சுளிக்கின்றனர்.

அமைச்சர் கே.என்.நேரு
சமீபத்தில் அமைச்சர் நேரு பேசியது காவல்துறையை மாசுபடுத்தி உள்ளது. தனக்கு வேண்டிய டிஎஸ்பியை பார்த்து அவரின் திறமை என்ன என்றால், ஒருவரை குற்றவாளியாக ஆக்க முடியும், குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்க முடியும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் காவல்துறையில் திமுக அரசு தலையீடு எப்படி இருக்கிறது என்று தெரிந்துள்ளது. சென்னை மேயரை அமைச்சர் ஒருமையில் பேசினார் இது சர்ச்சை ஏற்படுத்தியது. பிறகு அவரே பதில் கூறும் தர்ம சங்கடம் நிலை ஏற்ப்பட்டது.

அமைச்சர் எ.வ.வேலு
அதேபோல் அமைச்சர் எ.வ.வேலு போக்குவரத்து வாகனங்கள் கூடிவிட்டன, சாலையை விரிவாக்கம் செய்யப் போனால் நிலம் இல்லாதவன் கூட, ஒரு பச்சைத் துண்டு போட்டு கொண்டு நிலத்தை எடுக்க கூடாது என்கிறான் இது விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட சென்னை சேலம் 6 வழிச்சாலை உட்பட பல சாலை விரிவாக்க பணிகளுக்கு, திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே தற்போதைய அமைச்சரின் பேச்சு திமுகவிற்கு தர்ம சங்கடத்தை இதில் ஏற்படுத்தி உள்ளது.

திமுக நிலைப்பாடு
ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிலைப்பாடும் என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர். நிதி அமைச்சரிடம் யாரும் பேசிவிட்டு ஆறுதலோடு வெளியே வருவதில்லை, அரசு ஊழியர்களிடத்தில் அவர் செய்திருந்த விமர்சனமும், பாரத பிரதமரை கல்வித் தகுதி குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும், இன்றைக்கு மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

திமுக எம்பி செந்தில் குமார்
அதே போல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நீதியரசர்களை விமர்சித்தது மக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் தனது அரசை திராவிட மாடல் அரசு என்று கூறுகிறார். அமைச்சர்களின் பேட்டிகள் இது போன்ற கருத்துக்களை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என்று நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. இந்த கருத்துக்கள் முதலமைச்சரின் வழிகாட்டிதலின்படி தான் அமைச்சர்கள் வெளியிடுகிறார்களா என்ற அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் கருத்துக்களை சட்டமன்றத்திலும் சரி, பொது இடங்களும் சரி மக்கள் முகம் சுளிக்கும் வகையில், தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் உள்ளது.

முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா
இதை முதலமைச்சர் கருதில் கொண்டு நடவடிக்கை எடுப்பாரா அல்லது எப்போதும் போல மௌனத்தோடு கடந்து செல்வாரா என்று மக்களிடத்தில் மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. இது போன்ற கருத்துக்களை முதலமைச்சர் கண்டித்தோ அல்லது மறுப்பு தெரிவித்து எந்த பதிலும் கூறவில்லை. சென்னையில் புதிய விமான நிலைய உருவாக்க நிகழ்வில் கூட அரசின் சார்பில் வெளியிடப்படும் கருத்துக்கள், அப்பகுதி மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 5,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து ஒரு விமான நிலையத்தை தொடங்குகிற போது அந்தப் பகுதி நீர்நிலைகளின் நிலை என்ன, அந்தப் பகுதியில் பாரம்பரியமான ஆண்டாண்டு காலமாக பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற மக்களின் எதிர்கால நிலை குறித்து அந்த மக்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்பட்டுள்ளது.

முழுமையான தோல்வி
ஆகவே அமைச்சர் பெருமக்கள் இந்த விவகாரத்தை கையாளுவதிலே முழுமையாக தோல்வி அடைந்தார்கள் என்பது தான் ஊடகங்களில் வெளியிட்ட செய்திகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே அரசு, அரசின் திட்டங்களை அதன் பலன்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல எப்படி செயல்படுகிறது என்பதை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் மக்கள் மன்றத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது. இதை பார்க்கும்போது அதிமுக வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும் போதெல்லாம் திமுக எடுத்து வைத்த வாதங்களை பார்த்தால் அன்றைக்கு ஒரு நிலைப்பாடு, இன்றைக்கு ஒரு நிலைப்பாடு என்று காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ற வகையிலே தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்ட திமுக அரசால் பயனடையப்போவது, பாதிக்கப்படப்போவது யார் என இன்றைக்கு இந்த நாட்டிலே பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications