சாக்கு மூட்டையில் பணம்.. ‘அந்த பலூன்காரரை நம்பி போனவர் கதி’ - ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த ஆர்பி உதயகுமார்
மதுரை : சாக்கு மூட்டையில் பணத்தை வைத்துக்கொண்டு ஆள் பிடிக்கும் வேலையை ஓ.பன்னீர்செல்வம் செய்து வருகிறார். எங்களை விலை பேச முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார்.
மேலும், ஓபிஎஸ் அணிக்குச் சென்ற எம்.எல்.ஏ அய்யப்பனின் நிலை, திருவிழாவில் பஞ்சுமிட்டாய் மற்றும் பலூன் விற்பவர்களை நம்பி குழந்தைகள் பெற்றோரை விட்டு பலூன் காரரோடு சென்றுவிடுவது போலத்தான் என விமர்சித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி, திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் டி.கல்லுப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமங்கலம் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

திமுகவை விட அதிமுக
திமுக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் டி.கல்லுப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த அண்ணாவின் பிறந்தநாள் விழாவை, விருதுநகரில் முப்பெரும் விழாவாக முதலமைச்சர் நடத்தியதோடு முடித்து விட்டார். ஆனால் எடப்பாடியார் 234 தொகுதிகளிலும் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.

8 ஆண்டுகளாக நாங்கள்
மின் கட்டணத்தை உயர்த்தி அரசு சர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 15,000 கோடியளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தில் 22,000 கோடி அளவில் மின்சாரத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது திமுக அரசு மானியம் வழங்காமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

அண்ணன் கோட்டையை பிடிக்க
முதலமைச்சர் தொடர்ந்து பத்து நாட்களாக மதுரைக்கு வருகிறார். அண்ணன் கோட்டையை பிடித்து விடுவோமா என்று நினைக்கிறார். தென் மாவட்டத்தை விட்டு விடுங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். தென் மண்டல சிறு குறு தொழில் நிறுவனங்களின் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. 20 லட்சம் வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மின்சார கட்டண உயர்வால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அதிமுகவினரை பிடிப்பதிலேயே குறி
தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். கல்விக் கடன் ரத்து செய்யவில்லை. இரண்டு சக்கர வாகன திட்டத்தை நிறுத்தி விட்டனர். இப்போது 52% மின் கட்டண உயர்வு, 150% சொத்து வரி உயர்வு, கடந்த மாதத்தில் மட்டும் 133 கொலைகள் இன்றைக்கு காவல்துறை ஏவல் துறையாக மாறி உள்ளது. குற்றம் செய்பவர்களை விட்டுவிட்டு அதிமுகவினரை பிடிப்பதிலேயே போலீஸ் குறியாக உள்ளது. ஏனென்றால் திமுகவிற்கு நாங்கள் சிம்ம சொப்பனமாக இருக்கிறோம்.

எடப்பாடிக்கு மட்டுமே தகுதி உண்டு
எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் எங்களை விரும்புகின்றனர் என்று முதலமைச்சர் கூறுகிறார். தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை பாகிஸ்தான் மக்கள் விரும்புகிறார்களா? தமிழ்நாட்டை ஆளும் தகுதி எடப்பாடிக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்றிய பிறகு எந்த நாட்டுக்கு முதலமைச்சராக எந்த நாட்டுக்கு முதலமைச்சராக இருக்கப் போகிறார்? கருணாநிதி தரம் பிடித்து வந்த ஸ்டாலினின் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற பகல் கனவு பலிக்காது.

பெட்டியை மாத்திட்டாங்களோ
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலைக்குத்தான் வாக்களித்தோம் எடப்பாடியார் முதலமைச்சர் ஆக வரவேண்டும் என்று தான் நினைத்தோம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் பெட்டியை மாற்றி விட்டார்களா என்று தெரியவில்லை, ஆனாலும் நாங்கள் சோர்ந்து விடவில்லை. இன்றைக்கு மக்களுக்காக வீதியில் இறங்கி குரல் கொடுத்து வருகிறோம்.

சாக்கு மூட்டையில் பணம்
திருவிழாவில் பஞ்சுமிட்டாய் மற்றும் பலூன் விற்பவர்களை நம்பி குழந்தைகள் பெற்றோரை விட்டு சென்று விடும். அப்புறம் தான் தெரியும் அவர்கள் காசு கொடுத்தால் தான் பலூன் கொடுப்பார்கள் என்று. அதைப் போலத்தான் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பனின் நிலை இருக்கிறது. தற்போது சாக்கு மூட்டையில் பணத்தை வைத்துக்கொண்டு ஆள் பிடிக்கும் வேலையை ஓ.பன்னீர்செல்வம் செய்கிறார். எங்களை விலை பேச முடியவில்லை. உண்மையான தொண்டர்களை அவரால் விலைக்கு வாங்க முடியாது." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications