பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. பெப்பர் ஸ்ப்ரேயை கையில் கொடுத்த அதிமுக சரவணன்! சிலம்பம் ட்ரெய்னிங் வேற!
மதுரை: திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி சென்னை அதிமுக அலுவலகத்தில் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் மதுரையில் முன்னாள் எம்எல்ஏ சரவணன் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கியதோடு, சிலம்ப பயிற்சியும் அளித்து வருகிறார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

யார் அந்த சார்? என்ற கேள்வியோடு அதிமுக சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண் நிர்வாகிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி பழனிசாமி:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பது போல் இந்த விடியா ஆட்சி அமைந்த நாள் முதலே, நாள் ஒரு பாலியல் வன்கொடுமை ,பொழுதொரு கற்பழிப்பு சம்பவங்கள் என தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை நீடிக்கிறது. பெண்களிடம் தீமை புரிபவர்களை தங்கள் கட்சியிலேயே "அனுதாபி" களாக வைத்துக்கொண்டு,
அவர்களுக்கு புகலிடமும் அளித்துவரும் திமுக இந்நாட்டின் சாபக்கேடு.
பெப்பர் ஸ்பிரே:
இனியும் இந்த மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியை நம்பி எந்தப் பயனும் இல்லை, தமிழ்நாட்டுப் பெண்கள், நீங்கள் எந்த வயதினர் ஆனாலும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நீடித்து வருகிறது. ஆகவே இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், Pepper Spray, SOS alarm அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் பெட்டகத்தை மகளிர்க்கு வழங்கியதோடு, பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில் பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள இதுபோன்ற உபகரணங்களை எப்போதும் உடன் வைத்துக்கொள்ளுமாறும் ஒரு தந்தையாக உங்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

மதுரையில் ஏற்பாடு:
இதேபோல அதிமுக மருத்துவர் அணி சார்பில் இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன் மதுரையில் இளம் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கியதோடு தற்காப்பு கலை பயிற்சியும் அளித்து வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லியபடி, பெண்கள் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள
தற்காப்பு கலைகள் மற்றும் தற்காப்புக்கான பெப்பர் ஸ்பிரே ஆகிய வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலின் அரசு:
மேலும் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிந்திருந்தனர், அதைக் கூட அணிந்து வரக்கூடாது என்று ஒரு புதுமையான சட்டத்தை ஸ்டாலின் அரசு கடைப்பிடிக்கிறது. தொடர்ந்து சட்டமன்றத்திலும்,மக்கள் மன்றத்திலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் சம்பவங்கள் குறித்து கழகப் பொதுச் எடப்பாடி பழனிசாமி தோலுரித்துக் காட்டினார். ஆனால் அதை திசை திருப்பும் வகையில், திமுக அமைச்சர்கள் இதற்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று பொறுப்பற்ற முறையில் கூறி வருகின்றனர்.

பெண்கள் பாதுகாப்பு:
கடந்த சில நாட்களுக்கு முன்பு கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஸ்டாலின் திமுக ஆட்சியில், பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று அவல நிலை உருவாகியுள்ளது. பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்கான பெப்பர் ஸ்பிரே வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்காத்துக் கொள்ள வேண்டும்:
அதனைத் தொடர்ந்து கழக மருத்துவரணி சார்பில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கப்படுகிறது ,இதனைத் தொடர்ந்து தங்களை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலைகளும் வழங்கப்படுகிறது. ஏனென்றால் இனி இந்த ஸ்டாலின் திமுக ஆட்சி நம்மை காப்பாற்றாது. ஆகையால் நமக்கு நாமே நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மக்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்கிறார் சரவணன்.












Click it and Unblock the Notifications