அண்ணாமலை கப்பு வாங்குனது இருக்கட்டும்.. கடையிலயா.. மேடையிலயா? அதான் மேட்டரே! சீண்டிய அதிமுக மாஜி!
மதுரை: அண்ணாமலை கப்பு வாங்கி விட்டோம் கப்பு வாங்கி விட்டோம் என்று சொல்கிறார். ஆனால், கப்பு வாங்கியது மேடையிலா கடையிலா என்பதுதான் மேட்டரே எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் தகிக்கிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, தனிக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது. பாஜகவும் சளைக்காமல் பிரதமர் மோடியை மாதா மாதம் தமிழ்நாட்டில் இறக்கி, திமுக, அதிமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரஸ் மீட், அறிக்கை என பரபரத்துக் கொண்டிருக்க, திமுக, அதிமுக என இரு கட்சித் தலைவர்களும் அண்ணாமலையை ரவுண்டு கட்டி அடித்து வருகிறார்கள்.

பாஜக - அதிமுக இடையே வார்த்தை மோதல்கள் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் அதே சமயம், பல்லடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து தள்ளினார். அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்து பிரதமர் மோடி இவ்வாறு பேசியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பல்லடத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிபேசும்போது எம்ஜிஆர், ஜெயலலிதா தியாகத்தை எடுத்துச் சொல்லி உள்ளார். தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் வாழ்ந்து இருந்தாலும், இந்த இருபெரும் தலைவர்களின் சிறப்பு எங்களைப் போன்ற அதிமுக தொண்டர்களை பெருமைக் கொள்ள வைக்கிறது. அந்த இருபெரும் தலைவர்களின் வாரிசாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
அதிமுகவை ஒருபோதும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைக்கு திமுக தெருமுனை பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் என எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையை காவு கொடுத்து விட்டார்கள். இன்று வரை மேகதாது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை. தன்னுடைய அரசியல் கூட்டணிக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை காவு கொடுக்கிறார் ஸ்டாலின்.
அண்ணாமலை கப்பு வாங்கி விட்டோம் கப்பு வாங்கி விட்டோம் என்று சொல்கிறார். அது மேடையில் வாங்கினதா? கடையில் வாங்கினதா என்ற விவாதம் நடைபெறுகிறது. மேடையில் கப்பு வாங்கினால் தான் தமிழக மக்கள் பாராட்டுவார்கள். இரண்டுமே வாங்குவது தான், ஆனால் கடையில் கப்பு வாங்கினால் கவுரவம் இருக்காது. கடையில் கப்பு வாங்கிக் கொண்டு மேடையில் மேடை வாங்கிவிட்டதாக பாராட்டை எதிர்பார்க்கிறார் அண்ணாமலை. அந்தக் கதை தமிழ்நாட்டில் எடுபடாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications