அவல நிலையில் அரசு மருத்துவமனைகள்..ஒதுக்கிய நிதி என்னாச்சு? மா.சு.விடம் கணக்கு கேட்கும் அதிமுக சரவணன்
மதுரை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையில் எந்த வளர்ச்சியும் இல்லை, முன்னேற்றம் இல்லை எனவும், மருத்துவமனை உள் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கிய 200 கோடி என்ன ஆனது? என கேள்வி எழுப்பியுள்ளர் அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர்.சரவணன், திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு 75,694 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், செலவுகள், திட்டங்கள் குறித்து முழு வெள்ளை அறிக்கையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் இது தொடர்பாக பேசிய அவர்," கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தின் சுகாதாரத்துறை முதன்மையிடத்தில் இருந்தது. குறிப்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தங்களின் மருத்துவ சேவைக்காக தமிழகத்திற்கு வந்தனர்.

கொரோனா காலங்களில் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை இருந்தது. மருத்துவத் துறையில் ஒரு புதிய சகாப்தம் படைக்கும் வகையில் எந்த மாநிலமும் செய்திடாத வகையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை உருவாக்கப்பட்டது.
அது மட்டுமல்ல தமிழகத்தில் அதிக மருத்துவர்களை உருவாக்கிடும் வகையில் 7.5 சகவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் ஆண்டுக்கு 666 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியை கூட உருவாக்காத கையாளாகாத அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. குறிப்பாக 2024-2025 பட்ஜெட்டில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதைப் பழக்கங்கள் மீட்பு மையங்களை நிறுவி, மது மற்றும் போதைப் பொருள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மன ஆலோசனை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட 20 கோடி நிதியை ஒதுக்கினார்கள் ஆனால் தமிழகத்தில் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.
மேலும் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தி உயர் சேவைக்காக, 200 கோடியை காப்பீட்டு தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது அது என்ன ஆனது என்று தெரியவில்லை? கடந்த 2024-2025 நிதியாண்டில் மட்டும் சுகாதாரத்துறைக்கு 20,190 கோடி ஒதுக்கப்பட்டது. அதேபோன்று 2023-2024 நிதியாண்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு 18,601 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல 2022-2023 நிதி ஆண்டில் 17,901கோடி ஒதுக்கப்பட்டது.
2021-2022 திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் 18,933 கோடி ஒதுக்கப்பட்டது. இதுவரை மட்டும் ஸ்டாலின் அரசு நிதிநிலை அறிக்கையில் 75,694 கோடி சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைக்கு அரசு மருத்துவமனைகள் தரங்கள் மேம்படுத்தப்படவில்லை மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் இல்லை, பற்றாக்குறை உள்ளது. போதுமான மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை இன்றைக்கு அரசு மருத்துவமனையை காட்டிலும் மக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில் உள்ளது.
மக்களே தேடி மருத்துவம் என்ற திட்டம் என்பது ஒரு நபருக்கு கொடுக்கும் மருந்துகளை அதை மூன்று நபர்களுக்கு கணக்குகாட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆகவே திமுக ஆட்சி பொறுப்பேற்று நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ஒதுக்கப்பட்ட 75,694 கோடி நிதியில் செலவுகள், திட்டங்கள் குறித்து அமைச்சர் மா.சு. முழு வெள்ளை அறிக்கை விட வேண்டும், எப்போதும் போல நீங்கள் இதை திசை திருப்ப முடியாது ஏனென்றால் இன்றைக்கு உங்கள் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications