கண்டுகொள்ளாத அதிமுக 2ம் கட்ட நிர்வாகிகள்.. கலக்கத்தில் ராம ஸ்ரீனிவாசன்.. கொடி பிடிக்க கூட வரலையாம்!
மதுரை: மதுரையில் அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு இடையில் மோதல் போக்கு தொடர்ந்து வருவது பேசுபொருளாகி இருக்கிறது. அதிமுகவின் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோருடன் பாஜக சீனியர்கள் சுமூக போக்கை தொடர்ந்தாலும், அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் விலகியே இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் களத்தில் இருக்கிறார். ராம ஸ்ரீனிவாசன் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே பல்வேறு மனக்கசப்பு அக்கட்சிக்குள் ஏற்பட்டது.

ஏனென்றால் 2016ஆம் ஆண்டு மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஆர்.மகாலட்சுமி இம்முறையும் சீட் கேட்டு வந்தார். ஆனால் ராம ஸ்ரீனிவாசன் தனது செல்வாக்கை பயன்படுத்தி சீட்டை கைப்பற்றினார். இந்த விவகாரம் முதலில் பெரிதாக வெளியில் தெரியவில்லை. ஆனால் ராம ஸ்ரீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பங்கேற்றார்.
அப்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் எஸ்கேப் ஆகினர். மதுரை தெற்கு தொகுதியில் இருந்து வரும் அதிமுக நிர்வாகி குமார் மட்டுமே உடனிருந்தார். பாஜக நிர்வாகியான ஏ.ஆர்.மகாலட்சுமியும் கூட உடன் வரவில்லை. மறுபக்கம் ராம ஸ்ரீனிவாசன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் ஆகியோர் மூலமாகவே அதிமுக நிர்வாகிகளை அணுகி வருகிறார்.
மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் உடனிருந்தாலும், அவர்கள் சுந்தர்.சி-க்கு பணியாற்ற சென்றுவிட்டனர். இதனால் ராம ஸ்ரீனிவாசனின் பிரச்சாரத்தின் போது கூட அதிமுக கொடிகளை பாஜக நிர்வாகிகளே தூக்கி செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஏற்கனவே மதுரை தெற்கு தொகுதியின் வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் அறிவிக்கப்பட்ட போதே, அவரின் ஹலால் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது.
இதனால் அதிமுக தலைவர்கள் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லும் போது பாஜகவின் கொடிகளோடு செல்வதை தவிர்த்து வருகின்றனர். மதுரை தெற்கு தொகுதியிலும் இஸ்லாமியர்கள் கணிசமாக வசித்து வரும் சூழலில், அந்த பக்கமே ராம ஸ்ரீனிவாசன் வாக்கு கேட்டு செல்வதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்களுடன் ராம ஸ்ரீனிவாசன் அனுசரித்து செல்வதில்லை என்று அதிமுக தொண்டர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். காமராஜபுரம், முனிச்சாலை, கீரைத்துரை, தெப்பக்குளம், மகால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வாக்குகள் உள்ளன. இவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு இன்னும் ராம ஸ்ரீனிவாசன் செல்லவே இல்லை என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் அதிமுக தரப்பில் முன்னாள் எல்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், முக்கிய நிர்வாகிகளான அண்ணாதுரை, சண்முகவள்ளி உள்ளிட்ட பலரும் ராம ஸ்ரீனிவாசனை சந்திக்கவே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அதிமுக ஆதரவு வாக்குகளும் திமுக பக்கம் சாய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications