பிடிஆரை ஓரம் கட்டும் திமுக.. மதுரையே கொந்தளிச்சு கிடக்குது! ஜாமீன் அமைச்சரவை.. விளாசிய அதிமுக மாஜி
மதுரை: திமுக அமைச்சரவையை ஜாமீன் பெற்ற அமைச்சரவை, அமைச்சர்கள் முழுவதும் வாய்தாவுக்கு சென்று வருகிறார்கள் எனவும், திமுக அமைச்சர்களை பொறுத்த வரையில் கலெக்ஷன், கரப்சன் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
அதிமுக சார்பில் மே தின விழாவையொட்டி மதுரை பொன்மேனி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மதுரை மாநகர் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு," அதிகார வர்க்கத்திலிருந்து தொழிலாளர்களை காப்பதற்காக வேலை நேரத்தை 8 மணி நேரமாக உருவாக்கி, தொழிலாளர் நலன் காக்க இந்த மே தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவுக்கே முன்னோடிய தமிழ்நாட்டில் தான் மே தினத்தை நமது முன்னோர்கள் கொண்டாடினர்., உழைக்கும் வர்க்கத்தை மேற்கோள் காட்ட மெரினாவில் சிலை வைத்தனர். ட்ரைசைக்கிள் தொழிலாளர்கள் மழையில் இருக்க கூடாது என்பதற்கு ரைன் கோட் வங்கி கொடுத்தனர். தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளும் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி.
விடிவு தருகிறேன் என ஆட்சிக்கு வந்தவர்கள் 5% சம்பள உயர்வு தான் கொடுத்துள்ளனர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக திட்டங்களை அறிவித்து வாயில் தான் வடை சுடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஆட்சியை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள். ஸ்டாலின் மட்டும் தான் 234 தொகுதியை ஜெயிப்போம் என கூறி வருகிறாரே தவிர மக்கள் நினைக்கவில்லை. நடிகர் திலகம் சிவாஜி., சரோஜாதேவி நடித்த திரைப்பட காட்சியில் மேற்கோள் காட்டி மக்களிடையே ஆசை வார்த்தை கூறி கேஸ் மானியம் என்னாச்சு கோபால்.? மின்சார உயர்வு கோபால் என பெண்கள் முதல்வரை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் கொதித்து பேசுகிறார்.! நீங்க கூட்டணி வைத்தால் மட்டும் இனிக்கும்.! கூட நட்பு கேடில் முடியும் என உங்க அப்பாவே காங்கிரஸ் கட்சி குறித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும் கூட்டணியில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை மக்களுக்கு ஆதரவாகவும், ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறதா? திமுக ஆதவாக தான் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது. தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் தருகிறேன் என கூறி ஆட்சி வந்த பிறகு இதுவரை நிரந்தரம் செய்யாமல் இருப்பதாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் இன்றைக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்திற்கு பழிச் சொல்லுக்கு ஆளாகி வருகிறார். முதல் நிதிநிலை அறிக்கையில் பிடிஆரை பாராட்டிய முதல்வர், 30 ஆயிரம் கோடி குறித்து பேசிய ஆடியோவில் தெரியாமல் PTR பேசிவிட்டார்., அவரை இன்றைக்கு ஏதோ ஒரு துறையில் போட்டு அவரை அந்த துறையை விட்டு அவரே விலகும் நிலைக்கு தள்ளியுள்ளனர் திமுக தலைமையினர். உங்கள் அமைச்சரவையை ஜாமீன் பெற்ற அமைச்சரவை., அமைச்சர்கள் முழுவதும் வாய்தாவுக்கு சென்று வருகிறார்கள்.
திமுக அமைச்சர்களை பொறுத்த வரையில் காலெக்ஷன், கரப்சன் தான். அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை இழிந்து பேசுவதும், தாழ்த்தப்பட்ட கவுன்சிலரை அவமரியாதை செய்வதும், பெண்களை ஓசி என கூறியதற்கு இன்றைக்கு எங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார். பாரத பிரதமரே இந்திய முதல்வர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என நாட்டின் பிரதமரே பாராட்டிய ஒரு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
போதை கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் திமுக காரன் தான்., குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் காவல்துறை இருந்து வருகிறது. உண்மையான விடுதலை, விடியலை வரும் 2026ல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவோம்" என பேசினார்.












Click it and Unblock the Notifications