மதுர குலுங்க குலுங்க.. மல்லுக்கட்டும் அதிமுக மாஜிகள்! இறங்கி அடிக்கும் இளைய தலைமுறை! அனல் பறக்குது!
மதுரை: நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது அதிமுகவும் திமுகவும். தமிழகத்தின் மையப் பகுதியான மதுரையில் இந்த முறை ஆதிக்கம் செலுத்தப் போவது யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. திமுகவினர் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், அவர்களை விட சற்று வேகமாகவே அதிமுகவினர் பணியாற்றி வருகின்றனர் அதிமுகவினர். ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, டாக்டர் சரவணன் என தெரிந்த முகங்கள் தற்போது தேர்தலுக்கான வேலையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
2026 தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருந்தாலும் தற்போது வேலைகளை துவக்கி விட வேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர் அரசியல் கட்சியினர். வழக்கம்போல திமுகவும், அதிமுகவும், பூத் கமிட்டி கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என கள அரசியல் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் மூத்த முன்னோடிகள் தங்கள் தொகுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் இருக்கும் 10 தொகுதிகளிலும் தேர்தல் வேலைகள் சூடு பிடித்திருக்கிறது. ஏறக்குறைய தேர்தலுக்கு 10 மாதங்கள் இருக்கும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்களை உற்சாகப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

மதுரை அதிமுக
மதுரையை பொறுத்தவரை 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும் அதிருப்தி நிலவிய போதும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் ஐந்து ஐந்து தொகுதிகளை பகிர்ந்து கொண்டது. அந்த அளவுக்கு மதுரை அதிமுகவுக்கு 'பலமாக பாலமாக' இருக்கிறது. மதுரை மாவட்ட அதிமுகவை பொருத்தவரை செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, டாக்டர் சரவணன், ராஜ் சத்யன் என பல தெரிந்த முகங்கள் இருக்கிறது.
ஆர்பி உதயகுமார்
திருமங்கலம் எம்எல்ஏவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தற்போது அதே தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறார். மேலும் திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஆனாலும், அவர் இந்த முறை நிச்சயம் திருமங்கலம் தொகுதியில் தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .
செல்லூர் ராஜு
மற்றொரு முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் முகாமிட்டு இருக்கிறார். வாரம் தோறும் எதாவது ஒரு நிகழ்ச்சி நடத்தி மக்களை சந்தித்தே தீர வேண்டும் என்பது அவரது திட்டம் போல.. அதிமுக கவுன்சிலர்கள் மூலம் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் பூத் கமிட்டி ஏஜென்ட் கூட்டம், மகளிர் அணி ஆலோசனை கூட்டம், திண்ணை பிரச்சாரம் என மக்களை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
ராஜன் செல்லப்பா
அடுத்ததாக மதுரையில் முக்கிய புள்ளியான ராஜன் செல்லப்பா மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் அவரது மகன் ராஜன் ராஜ் சத்யனும் மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆலோசனை கூட்டங்களையும், அதிமுக நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். பூத் கமிட்டி தொடங்கி, கிளைக் கழக கூட்டம், வார்டு அளவில் நிகழ்ச்சிகள் என தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என தற்போது அனைத்து பகுதிகளிலும் கால் வைத்து வருகின்றனர். அந்த வகையில் ராஜ் செல்ல ராஜன் செல்லப்பா மீண்டும் தனது தொகுதியில் களமிறங்குவது உறுதியாக இருக்கிறது.
டாக்டர்.சரவணன்
அதிமுக தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் டாக்டர் சரவணன் தான் முதன்முதலில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட திருப்பரங்குன்றம் தொகுதியிலேயே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அந்த தொகுதியில் தனக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது, சமூக வாக்கு வங்கி இருக்கிறது, ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து இருக்கிறோம். வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. தண்ணீர் இல்லாத காலத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்தோம். கொரோனா காலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினோம் என நம்பிக்கை இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல பிரபலங்களை அழைத்து வந்த நிகழ்ச்சிகள் நடத்துவது, கிரிக்கெட் போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவிப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீவிரமாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதி தான் அவரது முதல் தேர்வு. இரண்டாவது வாய்ப்பாக அவரது மருத்துவமனை இருக்கும் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக
இது ஒருபுறம் இருக்க மதுரையில் திமுகவினரும் விட்டுத் தருவதாக இல்லை. அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வடக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி என அவர்களும் அதிமுகவினருக்கு இணையாக களப்பணியாற்றி வருகின்றனர். இந்த தேர்தலில் மதுரையில் நிச்சயம் அனல் பறக்கும் என்கின்றனர் மதுரை மாவட்டத்தினர்.












Click it and Unblock the Notifications