ஈரோடு இடைத்தேர்தல்.. நிச்சயம் அதிமுகவே வெல்லும்! டக்குனு சொன்ன வானதி சீனிவாசன்! நோட் பண்ணுங்க
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து வானதி சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமைதியான முறையில் நேற்று நடைபெற்று முடிந்தது. இதனிடையே மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெல்லவே வாய்ப்புகள் அதிகமுள்ளதாக குறிப்பிட்டார்.
பாஜக சார்பில் மத்திய அரசின் சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் பாஜக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மத்திய அரசுத் திட்டங்களால் பயனடைந்த பெண்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு பாஜக மகளிரணி சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் நடைபெற்றது.

வானதி சீனிவாசன்
இதில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பாஜக அரசின் திட்டங்களால் பயனடைந்த 100 கோடி பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "மத்திய அரசுத் திட்டங்களால் பயனடைந்தோர் செல்பி எடுத்து நமோ செயலியில் பதிவிடும் திட்டம் நாடு முழுக்க தொடங்கப்பட்டுள்ளது.

பெண்கள்
மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் அதிகம் பயனடைந்தது பெண்கள் தான். பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களின் மூலம் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 80% வீடுகள் பெண்களின் பெயரில் தான் இருக்கின்றன. இதுபோன்ற காரணங்கள் பெண்கள் மீதான வன்முறை குறைவதிலும் முக்கியமானதாக இருக்கிறது. அதேபோல முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்தோரில் 65% பெண்கள் தான்..

ஆண் பெண் விகிதம்
உஜ்வலா திட்டத்தில் நாடு முழுக்க 48 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 45% பெண்கள் தான். இப்படி பெண்கள் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இதனால் பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள இருந்த தயக்கம் குறைந்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரித்துள்ளது. 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இப்படி மத்திய அரசுத் திட்டங்களில் பயனடைந்தோருடன் செல்பி எடுக்கும் திட்டம் தான் இது.

1 கோடி பயனாளிகளுடன் செல்பி
தமிழகத்தில் 1 கோடி பயனாளிகளுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு நடைபெறும். ஒரு எம்பி தொகுதியில் 20 ஆயிரம் பெண் பயனாளிகள் விகிதம் செல்பி எடுக்கவுள்ளோம். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்த செல்ல வேண்டியது பாஜகவின் கடமை. அதன்படியே இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பெண்கள் வளர்ச்சிக்கு பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அமைச்சர்கள்
மத்திய அமைச்சரவையில் இப்போது 11 பெண் அமைச்சர்கள் உள்ளனர். வெறும் பெயரளவில் இல்லாமல் அவர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டின் குடியரசுத் தலைவராகவும் பெண் ஒருவரே இருக்கிறார். பெண்களுக்கு வாய்ப்புகளைக் கொடுத்தால் நாடு, வீடு, சமூகம் என்று அனைத்தும் முன்னேறும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். இதன் காரணமாகவே பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல்
மேலும், பெண் மீதான தாக்குதல் புகார்களுக்கு போலீசார் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் சுணக்கமாக நடக்கக் கூடாது என நிதி கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.. மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications