"எய்ம்ஸ் மருத்துவமனை" மதுரையில் விரைவில் கட்டி முடிக்கப்படும்.. தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
மதுரைக்கு விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரை: மதுரை எய்ம்ஸ் கொண்டுவர வேண்டும் என முந்தைய ஆட்சியாளர்கள் நினைக்க கூட இல்லை என்றும், பிரதமர் மோடி மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளார் என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு பாஜகவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதேபோன்று கோவிலில் இருந்த மூதாட்டி ஒருவர் ஆளுநருக்கு மல்லிகைப்பூ கொடுத்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆளுநருக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கோவிலுக்குள் சென்று மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டார்.

தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. குடியரசுத் தலைவர் அண்மையில் இங்கு வந்து சாமி தரிசனம் செய்தார். நாட்டின் முதல்குடிமகளான குடியரசுத்தலைவர் மீனாட்சியம்மனை தரிசித்த பெருமைமிகு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் பிரதமர் என்று தெரிவித்தார்.

ஆளுநர் பதவி
தொடர்ந்து சு.வெங்கடேசன் விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அரசியல்வாதிகள் எல்லாம் ஏதோ, பொத்தாம் பொதுவாக ஆளுநர் பதவி தகுதியில்லாத பதவி என்பது போல பேசுகிறார்கள். சரித்திரத்தில் இல்லாத வகையில் தமிழர்கள் 4 பேர் ஆளுநர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு பெருமை கொள்ள வேண்டும். அதிகாரமிக்க பதவி வழங்குவதில்லை, மத்திய அமைச்சர் பதிவு வழங்கவில்லை என கூறுகின்றனர்.

சு.வெங்கடேசனுக்கு பதில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கியிருந்தால் மத்திய அமைச்சர்களாகி அப்போதும் சேவை செய்திருப்போம். ஆனால் இது குறித்து பேசியதற்கு தமிழக மக்களை தவறாக பேசுவதாக சிலர் கூறுகின்றனர். தமிழக மக்கள் மீது இப்போதும் அதிக அன்பு கொண்டுள்ளோம். தொடர்ந்து சேவையாற்ற காத்திருக்கிறோம். மக்களை ஒருபோதும் தவறாக பேசவில்லை. ஆனால் சு.வெங்கடேசன், அதிகமாக பொங்குகிறார் என்று தெரிவித்தார்.

எய்ம்ஸ் நிச்சயம்
தொடர்ந்து எய்ம்ஸ் பற்றிய கேள்விக்கு, ஒரு அரசியல்வாதியாக அல்லாமல், ஒரு மருத்துவராக எய்ம்ஸ் குறித்து நான் கருத்து தெரிவிக்கலாம். மதுரை என்பதால் எய்ம்ஸ் பற்றி பேச வேண்டும். எய்ம்ஸ் என்பது உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு. அதன்படி தான் கட்டப்பட வேண்டும். 50 மாணவர்கள் படிக்கத் தொடங்கி விட்டதால் நிச்சயம் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்.

எய்ம்ஸ் மருத்துவமனை
தற்போது மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என நினைக்க கூட இல்லை. ஆனால் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் கொண்டுவந்தார். திருநெல்வேலி, மதுரை , கோவை, சென்னை என பன்னோக்கு மருத்துவமனைகள் என எத்தனையோ மருத்துவமனைகளை மத்திய அரசு கட்டித் தந்துள்ளது. மத்திய அரசு மருத்துவமனையை கட்டித் தரவில்லை, மருத்துவத் துறையை பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்வதெல்லாம் சரியல்ல.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உயர்ந்து வருகிறது. இவையெல்லாம் உயர்ந்த நோக்கத்தோடு பிரதமர் சிந்தித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications