அலங்காநல்லூரில் கடைசி வரை விறுவிறுப்பு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்... கார் பரிசு
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறி வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கி முதலிடம் பிடித்துள்ளார் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக். 18 காளைகளின் திமில் பிடித்து தழுவிய கார்த்திக்கிற்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமை 15ஆம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இன்றைய தினம் காலை முதல் மாலை 6.30 மணி வரைக்கும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வாடிவாசலில் இருந்து முதலாவது முனியாண்டி கோவில் சாமி கோவில் அவிழ்க்கப்பட்டது. இரண்டாவதாக அரியமலை கெங்கையம்மன் கோவில் காளை அவிழ்க்கப்பட்டது.மூன்றாவதாக வலசை தாய் கிராம நொண்டி கருப்புசாமி கோவில் காளை அவிழ்க்கப்பட்டது.
இந்த போட்டியில் 1200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடத்தை பிடிக்க இரண்டு வீரர்களிடையே போட்டா போட்டி நிலவியது. கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அபிசித்தர் ஆகியோரிடையே கடும் போட்டா போட்டி நிலவியது.
மாலை 6.30 மணி வரை வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்க்கப்பட்டன. கருப்பயூரணியை சேர்ந்த கார்த்திக் என்ற வீரர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த வீரருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. அபி சித்தர் என்ற வீரர் 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார். எம். குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 12 காளைகளை அடக்கி 3ஆம் இடம் பிடித்தார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 78 பேர் காயமடைந்தனர். விழா சிறப்பாக நடைபெற்றதாகவும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் அமைச்சர் மூர்த்தி.












Click it and Unblock the Notifications