பயங்கரம்.. அலங்காநல்லூர் அசத்துதே! பிரம்மாண்டமாக உருவாகும் ஜல்லிக்கட்டு அரங்கம்.. மாடல் படங்கள்!
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் மைதானத்தின் மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையன்று தொடங்கி, பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழ்நாடு முழுவதும் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் திரள்வார்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் ஊருக்குள்ளேயே இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது.

தற்காலிக கேலரி அமைக்கப்படும்போது, அது சரிந்து விழும் அபாயமும் இருந்து வந்தது. மேலும் அதிகமானோர் கூடினால், ஜல்லிக்கட்டை பார்ப்பதில் சிரமமும் இருந்து வந்தது. இப் பிரச்சனைகளை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்துவதற்காக கலாச்சாரம் மையம் ரூ.44.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. 66 ஏக்கர் நிலப்பரப்பில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு கலாச்சார மைய பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

உலகத் தரத்தில் அமையும் ஜல்லிக்கட்டு கலாச்சார மையத்தில், வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருப்பு அறை, காளைகள் காத்திருப்பு கூடம், கால்நடை மருத்துவமனை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை, செயற்கை நீரூற்று, புல் தரைகள், ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. 10 ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசிக்கும் வகையில் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த மைதானத்தை சுற்றுலாத் துறை மூலம் பண்பாட்டு வளாகமாக மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. அடுத்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்திடும் வகையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்க ஒப்பந்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தின் மாதிரி புகைப்படங்களை ஜல்லிக்கட்டு மைதானத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் எஸ்க் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த படங்களை கண்ட பலரும் அசந்துபோய் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications