'அம்மா’ உணவகத்தில் ஆம்லெட்டா? வடை, ரசம், மோருடன் தடபுடல் விருந்து! மதுரையில் கிளம்பிய பகீர் புகார்!
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் ஒன்றில் திமுக பிரமுகர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அரசு விதிமுறைகளை மீறி ஆம்லெட், பூரி, வடை உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாகவும் பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
Recommended Video
கூலித் தொழிலாளிகள் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் பசியாறும் வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!
இதையடுத்து மாநகராட்சி பகுதிகளிலும், அடுத்த கட்டமாக நகராட்சி என தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும் ., சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் , சப்பாத்தி, பொங்கல், கலவை சாதம் உள்ளிட்டவை மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் உணவருந்தினர்.
மதுரை அம்மா உணவகம்
கடந்த வருடம் திமுக ஆட்சி அமைந்த நிலையில் ஏழை எளியோரின் பசியை போக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதாக அதிமுகவினர் புகார் கூறிய நிலையில், அம்மா உணவகம் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலினால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை உள்ள 10அம்மா உணவகங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
திமுக கவுன்சிலர்கள்
இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. அதற்கு முன்னுதாரனமாக மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி மற்றும் 5ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகளை வழங்கிவருகின்றனர்.
தடபுடல் விருந்து
இதேபோல் மதிய வேளைகளிலும் ரசம், மோர், ஆம்லேட் என அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து விற்பனை செய்துவருகின்றனர். அம்மா உணவகத்திற்காக வழங்கப்படும் மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை பயன்படுதி அரசு விதிமுரைகலை மீறி உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் ஈட்டுவதாகவும் நாள்தோறும் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்றுக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
பகீர் புகார்
மேலும் இந்த உணவுகளை தயாரிப்பதற்காக ரேசன்கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு ,உளுந்து, ரவை போன்றவை பயன்படுத்துவதாகவும் , ரேசன் அரிசி பொருட்கள் அம்மா உணவகத்திற்கு எப்படி வருகின்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறாக அம்மா உணவகத்தை வணிக செயல்பாட்டிற்காக மாற்றுவதாக திமுகவினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஏழை எளியோரின் பசி போக்க செயல்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளது வேதனை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
மக்கள் கோரிக்கை
இது போன்று பல்வேறு வகையான உணவுகளை விற்பனை செய்யப்படும் நிலையில் அதற்கான பில்களை பணியாளர்கள் தாங்களாகவே பேப்பரில் பில் எழுதி கொடுப்பதால், மாநகராட்சிக்கு முறைகேடான கணக்கை ஒப்படைத்து மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்துவதோடு, அம்மா உணவகத்தால் கடும் நஷ்டம் என கூறி அத்திட்டத்தை முடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாகவும், இது தொடர்பாக கவுன்சிலர் தரப்பில் விளக்கம் கேட்டபோது தாங்கள் பொதுமக்களின் வசதிக்காக குறைந்த விலையில் வழங்குவதாகவும் அரசியல்நோக்கோடு சிலர் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.