'ஓசியில் பைக் சர்வீஸ்'.. திண்டுக்கல் மெக்கானிக்கை தாக்கிய எஸ்ஐக்கு மறக்க முடியாத பரிசு
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் அண்ணாதுரை என்பவர் வாடிப்பட்டியில் பைக் ஒர்க்ஷாப் வைத்துள்ள திண்டுக்கலைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்குமாறு கூறினார். ஆனால் மெக்கானிக் சீனிவாசன் போனை எடுத்து பேசாததால், அவரை சப் இன்ஸ்பெக்டர் தாக்கினார்.. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக அண்ணாத்துரை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வாடிப்பட்டியில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் வைத்துள்ள திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையை சேர்ந்த சீனிவாசன் (வயது 31) என்பவரிடம் தனது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கச்சொல்லி கொண்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அண்ணாதுரை போன் செய்தும் அதனை மெக்கானிக் சீனிவாசன் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வாடிப்பட்டியில் உள்ள ஒர்க்ஷாப்க்கு வந்து மெக்கானிக் சீனிவாசன் மற்றும் கடை ஊழியரை கன்னத்தில் அறைந்து தாக்கியிருந்தார்.. இது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இதனையடுத்து மெக்கானிக் சீனிவாசன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்திடம் புகார் அளித்தார். அதில், "வாடிப்பட்டியில் பணியில் இருந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஏற்கனவே வாகனம் பழுதுபார்த்த வகையில் ரூ.8,600 பாக்கி வைத்திருக்கிறார்.
தற்போது மீண்டும் பணம் ஏதும் தராமல் இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கச் சொல்லி மிரட்டினார். போலீஸ்காரர் ஒருவருடன் வந்து கடை ஊழியரையும் தாக்கி கஞ்சா உள்ளிட்ட திருட்டு வழக்குகளை பதிவு செய்வதாகவும் என்னை மிரட்டினார்" என அதில் தெரிவித்துள்ளார். இதனிடையே சீனிவாசனை அண்ணாதுரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதை அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications