மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவரை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்
Recommended Video
மதுரை: மதுரையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த இருவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியது. இதில் ஒருவர் பலியாகிவிட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித் மற்றும் அவருடைய அண்ணன் ரஞ்சித் இருவரும் கடந்த 12-ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ரஞ்சித் மற்றும் அஜித்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த அண்ணன் ரஞ்சித் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல் துறையினர் 6 பிரிவின் கீழ் அஜித்தின் நண்பன் விக்னேஷ் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட அஜித்தின் நண்பன் விக்னேஷ் மற்றும் வின்செட் செல்வராஜ் இருவரும் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இந்த படுகொலை அரங்கேறியது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் காவல் நிலையத்தில் அருகே ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications