சித்திரை திருவிழா! கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்! மதுரை மாவட்டத்தில் ஏப்.23 உள்ளூர் விடுமுறை
மதுரை: மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவையொட்டி வரும் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட மே மாதம் 11 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருவிழாவான சித்திரை திருவிழா மதுரையில் நடைபெறும். ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21 ஆம் தேதியும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த சித்திரை திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.
மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது காலை வெள்ளி சிம்மாசனத்திலும் மாலை தங்க அம்பாரியுடன் யானை வாகனத்திலும் அம்பாள் மாட வீதிகளில் உலா வருவார். ஏப்ரல் 22 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் உற்சவமும் அன்றைய தினம் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். ஏப்ரல் 23 ஆம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கானோர் மதுரை மாநகருக்கு வருகை தருவார்கள்.
இதனால் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். அன்றைய தினம் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க சில கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ளது.
அதன்படி தோல் பையில் நிரப்பப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். கள்ளழகர் மீது வழியெங்கும் தண்ணீர் அடிக்கக் கூடாது, வைகை ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீரை அடிக்க வேண்டும். தண்ணீர் பீய்ச்சி அடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றுவிட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விழாவுக்கு ஏராளமானோர் வருகை தருவர் என்பதால் ஏப்ரல் 23 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக மே 11 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைதான். இந்த உள்ளூர் விடுமுறை அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும்.
இந்த அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு பிறகு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடந்து கள்ளழகர் மீண்டும் அழகர்மலைக்கு திரும்பும் நிகழ்ச்சியுடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவுறும்.












Click it and Unblock the Notifications