அதிமுக மாநாட்டில் அந்த 10 நிமிடம்.. ரொம்ப முக்கியம்! வானிலிருந்து தூவப்படும் 600 கிலோ மலர்கள்
மதுரை: மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் இன்று அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை கட்சியின் பொதுச்செயலாளர் கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வின்போது சுமார் 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட இருக்கிறது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின்னர் நடைபெறும் மாநில அளவிலான மாநாடு இது என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் கட்சியை ஓபிஎஸ் தரப்பினரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது முழுக் முழுக்க கட்சி எடப்பாடியின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் நிலையில் தென் மண்டலத்தில் தன்னுடைய செல்வாக்கை அதகரிக்க செய்ய இந்த மாநாடு திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓரணியாக இருந்த போதே தென் மண்டலத்தில் மொத்தமுள்ள 10 எம்.பி தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதற்கு பின்னர் நடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மொத்தமிருந்த 58 தென் மண்டல எம்எல்ஏ சீட்களில் அதிமுக கூட்டணி 15 இடங்களை மட்டுமே வென்றது. அப்போதும் அதிமுக ஒரே அணியாகதான் இருந்தது. இந்நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்திருக்கிறார். டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
தென் மண்டலத்தை பொறுத்த அளவில் எடப்பாடி தரப்பை விட ஓபிஎஸ் மற்றும் டிடிவி, சசிகலா தரப்பிற்குதான் அதிக வாக்கு வங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இதை உடைத்து தென் பகுதியிலும் தனது பலத்தை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி, அதிமுக 'பொன்விழா எழுச்சி மாநாட்டை' நடத்துகிறார். இன்று மதுரையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதற்காக சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல கட்சி தொடங்கி 51 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை சிறப்பிக்கும் வகையில் 51 அடி உயர கொடி கம்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் எடப்பாடி பழனிசாமி காலை 8 மணிக்கு கொடியேற்றி மாநாட்டை தொடக்கி வைக்கிறார். முன்னதாக அவரை மாநாட்டு அரங்கத்திற்கு வரவேற்க சுமார் 3,000 தொண்டர்கள் கட்சி சீருடையில் அணிவகுப்பை நடத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும்போது ஹெலிகாப்டரிலிருந்து 10 நிமிடங்களுக்கு சுமார் 600 கிலோ மலர்கள் தூவப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு பின்னர் தென் மண்டலத்தில் அதிமுக மாநிலம் தழுவிய மாநாடு நடைபெறுவதால் அரசியல் களத்தில் இந்த மாநாடு பெரும் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications