மதுரை என்டிஏ கூட்டத்தில் 2ஆவது முறையாக பேனர் மாற்றம்! நேற்று பெரியார்! இன்று மோடியின் banner!
மதுரை: மதுரை மண்டேலா நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் 2ஆவது முறையாக பேனர் மாற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று பெரியாரின் பேனரை மாற்றிவிட்டு தாமரை சின்னத்தை மாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தின் இன்று நடைபெறுகிறது.

இதற்காக விழா மேடைகள், அலங்காரங்கள் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் நுழைவு வாயில் முகப்பில் ஆரம்பத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இது அதிமுகவின் தேர்தல் பாணியைப் பிரதிபலித்தது.
சில மணி நேரங்களில் பெரியாரின் படம் மட்டும் திடீரென அகற்றப்பட்டு அவருக்கு பதிலாக தாமரை சின்னத்தை வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி போன்றோரின் படங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
இந்த மாற்றத்தை அதிமுக நிர்வாகிகளே செய்ததாக தெரிகிறது. பாஜக தரப்பின் எதிர்ப்பு அல்லது அழுத்தம் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று பல ஊடகங்கள் கூறுகின்றன. பாஜகவினர் பெரியாரை தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில் இந்த படம் மாற்றம், சர்ச்சையை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகளின் கண்டனங்கள்
திமுகவின் கனிமொழி எம்.பி.: அதிமுக "முதலாளி (பாஜக) சொன்னால் தொழிலாளி போல" செயல்படுகிறது. பெரியார் இந்த இடத்தில் இருக்க மாட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: மோடி, அமித் ஷா சொன்னால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களையும் அகற்றிவிடுவார்கள். அதிமுக பாஜகவின் கிளை அமைப்பாக மாறிவிட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: அண்ணா, ஜெயலலிதா படங்களும் அகற்றப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு விமர்சனம்.
இந்த சம்பவம் 2026 சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் உள்ள உள் முரண்பாடுகளையும், திராவிடக் கொள்கை vs இந்துத்துவ அணுகுமுறை இடையேயான பதற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், இது தொடர்ந்து பேசுபொருளாக இருக்கிறது.
இந்த நிலையில் மதுரை என்டிஏ பொதுக் கூட்டத்தில் தற்போது 2ஆவது முறையாக பேனர் மாற்றப்பட்டுள்ளது. அதாவது பேனரில் கூட்டணி கட்சித் தலைவர்களின் படமும் மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது. அதில் மோடி கோட்டு போட்டுக் கொண்டு கையை உயர்த்துவது போல் பேனர் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அந்த பேனரை நீக்கிவிட்டு மோடி வேஷ்டி சட்டை அணிந்து கழுத்தில் அங்கவஸ்திரம் போட்டுக் கொண்டு இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வது போல் இருக்கும் புதிய படத்தை மாற்றியுள்ளனர். இது மோடி தமிழ் மீதும் தமிழர் கலாச்சாரத்தின் மீதும் பற்று வைத்திருப்பதை காட்டுவதை போல் அமைந்துள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications