கப்பல்போல் பெரிய பங்களா! பளபளக்கும் நடிகர் சசிகுமாரின் சொந்த கிராமம்! பூர்வீக பணக்காரரா இவர்?
மதுரை: நடிகர் சசிகுமார் அவரது சொந்த கிராமத்தில் புதியதாக ஒரு பங்களாவைக் கட்டி முடித்திருக்கிறார். அந்த வீட்டைப் பார்க்கும் போது மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.
'சுப்பிரமணியபுரம்' நடிகராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் இன்றுவரை தமிழ் சினிமாவின் தனித்த அடையாளத்தைப் பெற்றுள்ளது. அதன்பின்னர் 'நாடோடிகள்' , 'சுந்தரபாண்டியன்', 'குட்டிப் புலி' எனப் பல படங்களில் நடித்துள்ள இவர் ஒரு தரமான தயாரிப்பாளர் என்று பெயரையும் எடுத்துள்ளார்.

இவர் தயாரித்த 'பசங்க'படம் பல விருதுகளைப் பெற்றது. இன்றுவரை அப்படம் தமிழ் திரையுலகில் குழந்தைகளுக்கான முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சசிகுமார் நடிகராக வருவதற்கு முன்பாக அமீருடன் பணியாற்றினார். அதற்கு முன்பே இவரது மாமாதான் பாலாவின் 'சேது' படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தார். அவரது மூலம் சினிமா ஆர்வம் இவருக்குள் வந்துள்ளது. இவரது குடும்பம் வசதியானது என்றதால் சிறுவயதிலேயே சசிகுமாரைக் கொடைக்கானலில் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். அதன்பின்னர் சசிகுமார் பிபிஏ படித்து முடித்த உடன் சினிமாவிற்கு வந்துள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள புது தாமரைப்பட்டிதான் சசிக்குமாரின் சொந்த ஊர். அங்கேதான் இவரது பூர்வீக வீடு உள்ளது. இங்கே அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசித்து வருகின்றனர். இதன் சுற்றுவட்டாரத்தில் சசிக்குமாரின் உறவினர்கள் வாழ்த்து வருகின்றனர். புது தாமரைப்பட்டியை பார்க்கும் போதே சுப்பிரமணியபுரம் படத்தில் வரும் ஊரைப் போன்றே அச்சு அசலாக இருக்கிறது.
சசிகுமாரின் அண்ணன் பெயர் சிவராஜ். தம்பி பெயர் ஆனந்த் குமார். இப்போது புது தாமரைப்பட்டியின் ஊராட்சி மன்றத் தலைவராக ஆனந்த் குமார்தான் இருந்து வருகிறார். சுயேச்சையாக நின்று தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுகவில் இணைந்துள்ளார். இவருக்கு முன்பு சசிகுமாரின் தந்தை மகாலிங்கம் கடந்த 36 ஆண்டுகள் முன்னதாக தலைவராக இருந்துள்ளார். அண்ணன் விவசாயம் செய்து வருகிறார். பல தலைமுறையாகவே இவரது குடும்பம் விவசாய குடும்பம்தான். மதுரை மீனாட்சியம்மன் கோயில் பக்கம் அய்யாசாமி பிள்ளை அண்டு கோ பாத்திரக் கடையை பூர்விக தொழிலாகச் செய்து வருகின்றனர். இந்தக் கடை 120 வருடங்களாக இயங்கி வருகிறது. 5 ஆவது தலைமுறையாகக் கடையை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஒத்தக்கடையில் சிவலிங்கம் தியேட்டர் சசிகுமாரின் குடும்பத்திற்குச் சொந்தமானதுதான். ஆனால், இப்போது இல்லை. சசிகுமாருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். சிவராஜன், சசிகுமார், ஆனந்த் குமார் என மூன்று ஆண் பிள்ளைகள். 2 பெண் பிள்ளைகள். சசிகுமாருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

என்னதான் சினிமாவில் பெரிய நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இவர் வளர்ந்து விட்டாலும் சொந்த ஊரை இன்னும் மறக்காமல் அப்படியே இருக்கிறார். ஆகவே, தனது சொந்த ஊரில் ஒரு பங்களாவைக் கட்டி இருக்கிறார். இது சசிகுமாருக்குச் சொந்தமானது. அண்ணன், தம்பி ஆகிய இருவருக்கும் தனித்தனியாக வீடுகள் உள்ளன. மதுரை சொந்த ஊருக்கு வரும்போது அவர் குடும்பத்துடன் இந்தப் பங்களாவில்தான் தங்கிவருகிறார் சசி. பூர்வீகமாக இருந்த வீடு பழசாகிப் போனதால் அதை இடித்துவிட்டு, புதிய பங்களாவைக் கட்டி உள்ளார். இப்போதுதான் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இவரது வீட்டுக்கு முன்பாக உள்ள மனை காலியாகவே உள்ளது. அங்கே கார் நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளன. இவரது வீட்டைச் சுற்றியும் பல வீடுகள் பங்களாவைப் போலவே உள்ளன. ஏதோ கிராமத்திற்குள் இருக்கின்றோம் என்ற உணர்வே வராத வகையில் பணக்கார தோற்றம் கொண்ட வீடுகளை வரிசையாகக் காண முடிகிறது. இந்த ஊரில் சசிகுமாருக்குச் சவால் விடும் அளவுக்குப் பல பணக்காரர்கள் இருப்பார்கள் போல் தெரிகிறது.












Click it and Unblock the Notifications