மதுரை தெற்கு, மேலூர்.. 2 தொகுதிகளுக்கும் அடிபோடும் பாஜக.. ஓபனாக பேசிய ராம சீனிவாசன்
மதுரை: மதுரை மாவட்டத்தில் மட்டும் மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய 2 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட திட்டமிட்டு வருவதாக பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை தெற்கு தொகுதி பாஜகவிற்கு சாதகமான தொகுதி என்று கூறியுள்ள அவர், இன்னொரு தொகுதியை கேட்க பாஜகவினர் விருப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், இன்று வரை சுமூகமாக பயணித்து வருகிறது. தற்போது தமிழக பாஜக கடந்த தேர்தலை விடவும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் அதிமுகவின் பலத்தை அறிந்து, அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் பாஜகவினர் தீவிரமாக இருந்து வருகிறார்கள். அதன்படி குறைந்தது ஒரு மாவட்டத்தில் 2 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று பாஜக கணக்கிட்டு வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று குறியாக உள்ளது.
அந்த வகையில் மதுரையில் 2 தொகுதிகளை பாஜக குறித்து வைக்கிறது. ஏற்கனவே முருகன் மாநாடு, திருப்பரங்குன்றம் விவகாரம் மூலமாக பாஜகவின் வாக்குகள் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 5 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இம்முறை மதுரையை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று இரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே செளராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் மதுரை தெற்கு தொகுதியையும், மேலூர் தொகுதியையும் பாஜக குறி வைத்திருக்கிறது. மதுரை தெற்கு தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிக வாக்குகளை பாஜக பெற்று அதிமுகவை பின்னுக்கு தள்ளியது. கிட்டத்தட்ட 8 பூத்களில் பாஜக முதலிடத்தை பிடித்தது. தனித்துப் போட்டியிட்ட போதும் பாஜக இவ்வளவு வாக்குகளை பெற்றது ஆச்சரியத்தை கொடுத்தது.
இதன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ராம சீனிவாசன் மதுரை தெற்கில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார். கடந்த சில மாதங்களாகவே மதுரை தெற்கு தொகுதியை ராம சீனிவாசன் சுற்றி சுற்றி வருகிறார். இன்று கொண்டாடும் பிறந்தநாளினை கூட மதுரை தெற்கு தொகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தான் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து ராம சீனிவாசன் பேசுகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறேன். மக்களுக்கு என் முகம் நன்றாக தெரிந்துள்ளது. அதன் காரணமாகவே நாடாளுமன்றத் தேர்தலில் 2வது இடத்தை பிடிக்க முடிந்தது. மதுரையில் பாஜகவின் சோசியல் இன்ஜினியரிங் பணிகளும் சிறப்பாக நடந்து வருகின்றன.
மதுரை தெற்கு தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். எங்களுக்கு சாதகமான தொகுதி என்பதால், மதுரை தெற்கில் போட்டியிட முயற்சிக்கிறோம். அதேபோல் மதுரை தெற்கு மட்டுமல்லாமல் கூடுதலாக மற்றொரு தொகுதியை கேட்க வேண்டும் என்பது எங்கள் கட்சியினர் விருப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications