இரவோடு இரவாக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கைது! திருப்பரங்குன்றம் அடிவாரத்தில் திடீர் பரபரப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து சர்ச்சை அரங்கேறி வருகிறது. இதனால் திருப்பரங்குன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தடையை மீறி, திருப்பரங்குன்றம் மலையின் மீது அமைந்துள்ள கல்லத்தி மரத்தைப் பார்வையிடச் சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உட்பட 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தொடர்பாகச் சில காலமாகவே சர்ச்சை இருந்து வருகிறது. இந்த கோயிலில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். வழக்கமாக இந்தத் தீபம் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், தீபத்தை மலை உச்சியில் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

திருப்பரங்குன்றம்
அந்த கோரிக்கையை ஏற்ற தனி நீதிபதி மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இருப்பினும், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக ஐகோர்ட் மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து பதற்றம் இருப்பதால் திருப்பரங்குன்றம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்றைய தினம் மாலை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திருப்பரங்குன்றம் காசிவிஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றார். அவருடன் மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
இரவோடு இரவாக கைது
வழிபாட்டை முடித்த பிறகு கல்லத்தி மரத்தில் தர்கா நிர்வாகத்தால் கட்டப்பட்ட கொடி அகற்றப்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டும் என ஹெச் ராஜா சொல்லி இருக்கிறார். இருப்பினும், போலீசார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் கோபமடைந்த ஹெச் ராஜா போலீசார் உடன் வாக்குவாதம் நடத்தினார். இருப்பினும், போலீஸ் அங்கு அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
இருப்பினும், போலீஸ் தடையை மீறி ஹெச் ராஜா உள்ளிட்டோர் கல்லத்தி மரப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்குச் சென்ற போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக மலை அடிவாரத்துத்துக்கு அழைத்து வந்தனர். தடையை மீறி கல்லத்தி மரப்பகுதிக்குச் சென்றதால் ஹெச்.ராஜா உள்ளிட்ட 12 பேரையும் அதிரடியாகக் கைது செய்தது. இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஹெச்.ராஜா ஆவேசம்
இது தொடர்பாக ஹெச்.ராஜா கூறுகையில், "உயர்நீதிமன்றம் இங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி தீபத்தை ஏற்றியிருந்தால் ஒரே நாளில் இந்தப் பிரச்சினை முடிந்திருக்கும். ஆனால், அதைச் செய்யாமல் மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டனர். சட்டத்தை மதிக்காமல் இந்த விவாதம் கையாளப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தின் தல விருட்சம் தான் கல்லத்தி மரம். தர்கா நிர்வாகம் அந்த மரத்தில் கொடியை ஏற்றியுள்ளனர். கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. இருப்பினும், இப்போது வரை அந்த கொடியை அவர்கள் அகற்றவில்லை. அதை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் இந்துக்கள், முருக பக்தர்கள் திரண்டு போராடுவோம்.
தீபம் ஏற்ற வேண்டும்
மேலும், தை மாதக் கார்த்திகை நட்சத்திரத்திற்குள் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றவில்லை என்றால் இந்த விவகாரம் தேர்தல் பிரச்சினையாக மாறும். திமுக கூட்டணி வீட்டுக்கு அனுப்பப்படும்" என்றார். ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நள்ளிரவுக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications