பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.. ஓபிஎஸ்க்கு போனை போட்ட நயினார் நாகேந்திரன்.. அடுத்தது என்ன?
மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தொலைப்பேசியில் பேசிய போதும், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்டார் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால், ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதாக அறிவித்தார். தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு அளிக்கக் கோரி ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில், கடைசி வரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பாஜக தரப்பில் தனக்கான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று ஓபிஎஸ் ஆதங்கத்தில் இருந்தார்.

இதன்பின் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. அதேபோல் விரைவில் ஓபிஎஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தற்போது வரை எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே முதல்வர் ஸ்டாலினை அவரின் இல்லத்திலேயே சென்று ஓபிஎஸ் சந்தித்தார்.
ஓபிஎஸ், அவரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் சந்தித்து சுமார் 50 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். இதன்பின் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை.. எதிர்காலத்தில் யாருடனும் கூட்டணி அமையலாம் என்று தெரிவித்தார். இதனால் ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகப் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்யும் நோக்கில் பாஜக தரப்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார். சுமார் 1 மணி நேரம் வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், பாஜகவுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே ஓ.பன்னீர்செல்வத்துடன் தொலைப்பேசியில் பேசி இருந்தேன். அவருடன் பேசிய போதும் ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். அவருக்குச் சொந்த பிரச்சனையா அல்லது வேற எதுவும் பிரச்சனையா என்று எதுவும் தெரியவில்லை.
பிரதமர் மோடியை சந்திக்க விரும்பி இருந்தால், எங்களிடம் சொன்னாலே போதும்.. நாங்களே ஏற்பாடு செய்திருப்போம்.. எங்கள் தரப்பில் இருந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரிடமும் பேசினோம். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். இருந்தாலும் ஏன் இப்படி முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. அவரின் முடிவு குறித்து கருத்து சொல்ல முடியாது.
ஓபிஎஸ் - முதல்வர் ஸ்டாலின் இடையிலான சந்திப்பு ஏன் என்று தெரியவில்லை. தொகுதி பிரச்சனைக்காகக் கூட சந்தித்திருக்கலாம். முதல்வர் ஸ்டாலினை நான் கூட சந்திக்கலாம். ஒருவேளை பிரதமர் மோடி அடுத்தமுறை தமிழ்நாடு வரும் போது ஓபிஎஸ் சந்திக்க விரும்பினால், ஏற்பாடு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications