மதுரையில் தடம் புரண்ட போடி ரயில்! ஊழியர்களின் கவனக்குறைவுதான் காரணமா? விசாரணையில் ஷாக்
மதுரை: சென்னையிலிருந்து போடி வரை இயக்கப்பட்ட போடி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 31ம் தேதி திடீரென மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தால் பயணிகள் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. ஆயினும் பயணம் குறித்த அச்சம் மேலெழுந்தது. இதனையடுத்து விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டது. இதில் ஊழியர்களின் கவனக்குறைவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
சென்னையிலிருந்து போடிக்கு ரயில் சேவை என்பது தேனி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இதற்காக போடி - மதுரை ரயில் பாதை அகலப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம் கரூர், மதுரை வழியாக போடிக்கு சென்று சேர்கிறது.

இதில் மதுரை வரை மின்சார என்ஜினும், மதுரையிலிருந்து டீசல் என்ஜின் கொண்டும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் இயக்கப்படும் இந்த ரயில், கடந்த 30ம் தேதி வழக்கம்போல சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டது. காலை 7.15 மணிக்கு மதுரை வந்த இந்த ரயில், 5வது நடைமேடையிலிருந்து டீசல் என்ஜின் மாற்றப்பட்டு, 7.36க்கு புறப்பட்டது. அப்போது என்ஜினுக்கு பின்புறம் இருந்த ரயில் மேலாளர் அறையுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியின் சக்கரம் திடீரென தடம் புரண்டது. இதனால் ரயில் உடனே நிறுத்தப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும் ரயில் பயணம் குறித்து அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் ஊழியர்களின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, என்ஜின் மாற்றப்படும்போது, பெட்டிகள் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு அடியில் கட்டை வைத்து முட்டு கொடுக்கப்படும். என்ஜின் மாற்றப்பட்ட பிறகு இந்த கட்டை அகற்ப்பட்டு விடும். ஆனால் சம்பவம் நடந்த அன்று இந்த கட்டை அகற்றப்படாமல் இருந்திருக்கிறது. இதுவே விபத்திற்கு முதற்கட்ட காரணமாகும்.
இந்த கட்டை ஏன் அகற்றப்படவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த ஊழியர்கள், “நாங்கள் கட்டையை அகற்றுவதற்கு முன்னரே, லோகோ பைலட் ரயிலை இயக்கிவிட்டார்” என்று கூறியுள்ளனர். பதிலுக்கு லோகோ பைலட், “கட்டை அகற்றப்பட்டது குறித்து முறையாக தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இரு தரப்பினரின் விளக்கத்தையும் அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையின் முடிவில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று சொல்லப்படுகிறது.
சமீப நாட்களாகவே ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது இந்த விபத்தக்கான முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. அதே நேரம், ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருப்பதும் விபத்துக்கான காரணமாக சொல்லப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications